வடக்கு கிழக்கு மாகாணத்தில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் ‘தமிழ் மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டுக்கான மன்றம்’ அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியார் மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆகியோரின் தலைமையில் குறித்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். ஆயர் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த கலந்துரையாடலில் வைத்து குறித்த மன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள துறைசார் பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பொருளியலாளர்கள், புலமையாளர்கள், கல்வியாளர்கள், தொழில்சார் நிபுணர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வடக்கு கிழக்கின் பொருளாதார, சமூக அபிவிருத்தி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை சமாந்தரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு சிவில் சமூகத்தின் காத்திரமான பங்களிப்பு அவசியமென தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்ததன் பின்னணியில் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது.
இளையோர் வலுவூட்டல், வறுமை ஒழிப்பு, விவசாயம், மீன்பிடி, திறன் விருத்தி, பொருளாதார வலுவூட்டல், கல்வி, சுற்றாடல், நல்லாட்சி, சுகாதாரம், விஞ்ஞானமும் புதுமைப் படைத்தலும், தகவல் தொழில்நுட்பம், சட்ட உரிமைகள், தமிழர் மரபு, பல்துறை ஒருங்கிணைப்பு ஆகிய துறைகளில் துறைசார் வல்லுநர்களை அடையாளம் கண்டு வளங்களை சரியான முறையில் ஒன்றுதிரட்டி சரியான திசையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக துடிப்பும் செயற்திறனும் மிக்க சிவில் சமூக குழு ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அறிவு, ஆய்வு மற்றும் செயற்றிட்டங்களின் வினைத்திறன்மிக்க முகாமைத்துவத்தின் ஊடாகவும் மற்றும் வெளிநாடுகளில் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள், வளங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் செழிப்பு மற்றும் வலுவூட்டலுக்காக மன்றம் ஒன்றை ஸ்தாபித்து செயற்படுவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கு, யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் நல்லை ஆதீன குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் தலைமையில் வடக்கு கிழக்கை சேர்ந்த 50 இற்கும் அதிகமான துறைசார் நிபுணர்கள், பேராசிரியர்கள் மற்றும் புலமையாளர்கள் மேற்குறிப்பிட்ட விடயங்க்ள தொடர்பாக இணைந்து செயற்படுவதற்கு முன்வந்துள்ளனர்.

