ரிஷாத் பதியூதீனின் சகோதரன் கைது

268 0

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் சகோதரன் ரிப்கான் பதியூதீன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியிலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.

தலைமன்னார் பிரதேசத்தில் அமைந்துள்ள பிற நபருக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பினை போலியான ஆவணங்களை தயாரித்து கைப்பற்றிய சம்பவம் தொடர்பில் ரிப்கான் பதியூதின் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் சார்பாக நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ, தனது கட்சிக்காரர் இந்த குற்றச்செயலுடன் தொடர்பு கொள்ளமைக்கு எவ்வித சாட்சியங்களும் இல்லாததால் அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றில் கோரினார்.

எனினும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் அறிவித்தனர்.

மேலும், விசாரணைகள் நிறைவடையும் வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபரை பிணையில் விடுவித்தால் விசாரணை நடவடிக்கைகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்த கொழும்பு பிரதான நீதவான் அவரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்து உத்தரவிட்டார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பதிவாளர் ஒருவரை பிணையில் விடுவிக்க நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.