காணும்பொங்கல்: சென்னையில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு; மெரினாவில் சிறப்பு ஏற்பாடு- காவல்துறை அறிவிப்பு

248 0

காணும்பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா பீச், சுற்றுலாதளங்கள், பொழுதுபோக்கு மையங்களில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக சென்னை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை அறிவிப்பு:

“காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக 5,000 போலீஸார் மற்றும் சென்னையிலுள்ள இதர பொழுதுபோக்கு இடங்களில் 5,000 போலீஸார் என மொத்தம் 10,000 போலீஸார்களுடன் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாளை 17.01.2020 (வெள்ளிக்கிழமை) காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், உத்தரவின்பேரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுமக்கள் அதிகளவில் கூடுமிடங்களான மெரினா கடற்கரை மற்றும் இதர இடங்களில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள் தினகரன்,(வடக்கு), பிரேம் ஆனந்த் சின்ஹா, (தெற்கு) மற்றும் அருண், (போக்குவரத்து) ஆகியோரது அறிவுரையின்பேரில், காவல் இணை ஆணையாளர்கள் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் 5,000 காவல் போலீஸார்களும், இதர பொழுதுபோக்கு இடங்களில் 5,000 காவல் போலீஸார் என மொத்தம் 10 ஆயிரம் போலீஸார் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மெரினா கடற்கரை (உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை)

சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் முக்கியமான இடமாக கருதப்படும் மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலையிலும், உழைப்பாளர் சிலைமுதல் கலங்கரை விளக்கம் வரையுள்ள மணற்பரப்பிலும் காவல் அதிகாரிகள் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்பேரில், உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தலா ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. இதே போல, உழைப்பாளர் சிலை முதல் களங்கரை விளக்கம் வரையிலுள்ள சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கு அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இது தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 140-க்கும் நீச்சல் தெரிந்த நபர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.

கடற்கரை மணற்பரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்பட்டு, அவர்களுக்கு கையடக்க வான் தந்தி கருவி (வாக்கி டாக்கி), மெகா போன், பைனாகுலர் ஆகியவை வழங்கப்பட்டு வாட்சப் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து பைனாகுலர் மூலம் போலீஸார் கண்காணித்து மெகா போன் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், கட்டுப்பாட்டறைக்கு வான் தந்தி கருவி மூலமும் வாட்சப் குழுவிலும் உடனுக்குடன் தகவல்கள் வழங்குவார்கள். 3 பறக்கும் பொம்மை விமானத்தில் (drone) கேமராக்கள் பொருத்தப்பட்டும், 12 முக்கியமான இடங்களில் அதிக ஒளி திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டும், அவை தற்காலிக கட்டுப்பாட்டறையில் அமைக்கப்பட்டுள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கப்படும்.

அன்றைய தினம் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதிக்காமல் போலீஸார் மூலம் கண்காணிக்கப்படுவர். மேலும், ஆயுதப்படையின் குதிரைப்படையுடன் கூடுலாக 16 குதிரைகள் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய 7 (All Terrain Vehicle) மூலம் கடற்கரை மணற்பரப்பில் போலீஸாரால் ரோந்து வரப்பட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்படுவர்.

சிறிய அளவிலான நான்கு சக்கர வாகனங்களில் (Elevator Vehicle Picket) காவல் ஆளிநர்கள் மூலம் ஒலி பெருக்கியில் பாதுகாப்பு குறித்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இது மட்டுமின்றி சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மற்றும் போலீஸாரால் சர்வீஸ் சாலை மற்றும் இதர பகுதிகளில் ரோந்து சுற்றிக் கொண்டு கண்காணிக்கப்படும்.

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 1 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டு காவல் குழுவினர்களால் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும், மீட்புப் பணி மற்றும் மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினர் அடங்கிய ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வீரர்கள் கொண்ட தீயணைப்பு வாகனம், அப்பகுதியை சேர்ந்த நீச்சல் தெரிந்த 10 நபர்கள் மற்றும் மோட்டார் படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.

4 தற்காலிக உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, காவலர்களால் பைனாகுலர் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகள் வழங்கப்படும். மேலும், குதிரைப்படை மற்றும் 2 All Terrain Vehicle, சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து வரப்பட்டு, கண்காணிக்கப்படுவதுடன் ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பு குறித்த அறிவுரைகளும் வழங்கப்படும்.

குழந்தைகள் பாதுகாப்பு:

மேலும், கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரையிலுள்ள 11 காவல் உதவி மையங்கள் மற்றும் எலியட்ஸ் கடற்கரை தற்காலிக காவல் கட்டுப்பாட்டறையில் வைக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் இங்கு நிறுத்தப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர்.

ஆகவே, குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையங்களில் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதே போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் (Amusement Park) மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் காணும் பொங்கலை கொண்டாட சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி காணும் பொங்கல் விழாவை சீரும் சிறப்புமாக கொண்டாட தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது”.

இவ்வாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.