திறைசேரிமுறி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை அடுத்த வாரம்

304 0

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் திறைசேரிமுறி தொடர்பில் விசாரித்து அறிக்கை இடுவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வின் அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இந்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை பாராளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டிருந்ததுடன், சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த அறிக்கையை பெற்றுக்கொடுக்காதிருக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று (13) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், தடயவியல் கணக்காய்வு அறிக்கையை விரைவில் தமக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற திறைசேரிமுறி விநியோகம் தொடர்பான தகவல்களும் தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் உள்ளடங்கியிருப்பதாகவும், இதிலுள்ள தகவல்களை அறிந்துகொள்ள குறித்த அறிக்கையை தமக்கு வழங்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (14) சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேராவை பாராளுமன்றத்தில் சந்திக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் தனது முடிவை அறிவிப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.