தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும்- குமரேஸ்

195 0

தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியை பொறுத்தவகையில் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் சுமார் 15 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக நாங்கள் அந்த கூட்டமைப்பில் இருந்து மக்களுக்கான பணிகளை முன்னெடுத்த ஒரு அமைப்பு.

குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்ய முடியாத சூழல் நீடித்து வந்தது. இதன்போது நாங்கள் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை முன்னெடுத்தோம்.

அதனை ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாற்ற முடியாமல் போனது. தமிழரசுக்கட்சி இடம்கொடுக்காத காரணத்தினால் தொடர்ச்சியாக அந்த கூட்டமைப்பில் இருந்து நாங்கள் உட்பட பல்வேறு கட்சிகள் வெளியேற வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.

தொடர்ச்சியாக நாங்கள் மீண்டும் தமிழ் மக்களின் அடையாளம், இருப்பு, தமிழ் மக்கள் பிரச்சினைகளில் இருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு இடை நடுவில் அதன் கொள்கை கோட்பாடுகளை இழந்து தேர்தல் விஞ்ஞாபனங்களை மறுதளித்து அரசிற்கு முண்டு கொடுக்கும் ஒரு சக்தியாக தன்னை காட்டிக் கொண்டது.

இதனாலேயே  அதிலிருந்து வெளியேறி தொடர்ச்சியாக நாங்கள் மீண்டும் ஒரு மாற்றுத்தலைமை அவசியம் என்கின்ற அடிப்படையில் நாங்கள் மாத்திரம் அல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகியவர்கள் இப்போது புதிதாகவும் சில கட்சிகளை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

மேலும் ஏனைய கூட்டமைப்பில் இருந்து விலகிய தனிநபர்களுடன் இணைந்து ஒரு மாற்றுத்தலைமையை நாங்கள் இன்று முன் நகர்த்திக்கொண்டு இருக்கின்றோம்.

இதன் இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக நான் நம்புகின்றேன். அந்த மாற்று அணிக்கு முன்னாள் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  தலைமை தாங்க இருக்கின்றார்.

எதிர்வரும் தைப்பொங்கள் தினத்திற்கு பின்னர் அந்த மாற்று அணியின் பெயர், மாற்று அணி எவ்வாறு செயற்பட உள்ளது என்பது தொடர்பான மாற்று அணியின் கொள்கைத் திட்டங்கள் தொடர்பான விடயங்கள் மக்களுக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

எனவே எதிர்வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் சரி நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி தேர்தல் போன்ற தேர்தல்களுக்கு மாற்று அணி வட.கிழக்கு மாகாணங்களில் களமிறங்கி போட்டியிட்டு தமது பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தும்.

மாற்று அணியில் விக்னேஸ்வரன் தலைமையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசியக்கட்சி மற்றும் ஏனைய அமைப்புக்களும் இணைந்து இந்த புதிய கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதனடிப்படையில் வடக்கு, கிழக்கில் இந்தக்கட்சி களம் இறங்கி வெற்றி பெறும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. வடக்கு,  கிழக்கில் இன்று இருக்கின்ற நிலமைகள் வேறு.

வடக்கு- கிழக்கில் நாங்கள் பிரிந்து நின்றாலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் தமிழர்களுக்கே என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

இதேவேளை கிழக்கில் தமிழர்கள் பிரிந்து நின்றால் அந்த பிரதிநிதித்துவம் சிங்களவர்களுக்கோ அல்லது ஏனையவர்களுக்கோ செல்லக்கூடிய நிலை இருப்பதினால் அங்கே எவ்வாறு போட்டியிடுவது அல்லது தமிழ் தேசியக்கூட்டமைப்பு அல்லது எங்களது மாற்று அணி இணைந்து எப்படி அந்த பிரதிநிதித்துவங்களை காப்பாற்றிக் கொள்ளுவது என்பதற்கான ஒரு தேர்தல் கூட்டாக அதற்கான வியூகங்களையும் நாங்கள் அமைக்க வேண்டி உள்ளது.

பிரதிநிதித்துவங்களை காப்பாற்றுவதற்காக சில விட்டுக் கொடுப்புகளுக்காக எமது கட்சியும் சரி கூட்டு முன்னனியும் சரி தயாராகவே இருக்கின்றது.

எனவே எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களை அதிகரித்து அரசாங்கத்துடன் பேரம் பேசும் ஒரு சக்தியாக நாங்கள் திகழ வேண்டும் என்பதற்காக அனைத்து தமிழ் மக்களும் மாற்று முன்னனிக்கு வாக்களித்து  பலப்படுத்த வேண்டும்.

மேலும் புதிதாக உருவாகியுள்ள ஆட்சி என்பது கடந்த காலங்களை விட தற்போதைய ஜனாதிபதியினுடைய செயற்பாடு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்தாலும் குறிப்பாக தமிழ் மக்கள் எப்போதுமே அச்சப்படக்கூடிய ஒரு சூழலே தற்போதும் காணப்படுகின்றது.

தேசிய பாதுகாப்பு என்கின்ற போர்வையில் தமிழ் மக்களுடைய பிரதேசங்களில் அதிகளவான இராணுவங்களை குவித்து பெருமளவான சோதனைச் சாவடிகள் அமைத்து, தமிழ் மக்களுக்கு மேலும் மேலும் அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய இவ்வாறான விடயங்கள் தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியினை மேலும் மேலும் வலுப்படுத்தும்.

குறித்த சம்பவம் ஒற்றுமையை அல்லது எதிர்காலத்தில் நாங்கள் நாட்டில் சேர்ந்து வாழக்கூடிய சூழலை உருவாக்காது என்பதனை இந்த அரசு புரிந்து கொண்டு தமிழ் மக்களின் நலன் சார்ந்து சில விடயங்களை கையாளுவதன் ஊடாகவே தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.