போலி மாணிக்கக்கற்களுடன் கல்முனையில் 6 பேர் கைது

257 0

பல இலட்சம் பெறுமதியானது என ஏமாற்றி  போலி மாணிக்கக்கற்களை வெளிநாட்டவர்களுக்கு  விற்பனை செய்ய முயன்றதாகச்  சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு சந்தேகநபர்களை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகே நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணியளவில்  குறித்த சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்முனையில் நிலைகொண்டுள்ள கடற்படையின் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகல்களை அடுத்து பொலிஸாரின்  உதவியுடன் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.  குறித்த சந்தேகநபர்கள் பயணம் செய்ததாக நம்பப்படும் நிசான் ரக  வேன், 6கைத்தொலைபேசிகள், பல வர்ணங்களை உடைய போலி மாணிக்கக் கற்கள்,  என்பன மீட்கப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்திற்குச் சந்தேக நபர்கள்  அழைத்துச்  செல்லப்பட்டனர்.

குறித்த சந்தேகநபர்கள் பயணம் செய்த வேன் வாடகை அடிப்படையில் பெறப்பட்டது எனவும் கைதானவர்கள்  சுமார் 24 முதல் 43 வயது உடையவர்கள் எனவும் அம்பாறை மற்றும் பசறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

கைதான 6 சந்தேக நபர்களும் சான்று பொருட்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.