ஆளும் – எதிர்க்கட்சி பாராளுமன்ற குழுக்கூட்டங்கள் இன்று நடைபெறும்!

226 0

எட்டாவது பாராளுமன்ற  நான்காவது சபை அமர்வுகள் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில்  ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின்  பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டங்கள் இன்று இடம்பெறுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டம் நாளை கூடும்.

 

பாராளுமன்ற புதிய கூட்டத்தொடர் நாளைய தினம் கூடுகின்றது. மிக முக்கியமான நிகழ்வுகளான புதிய ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை இடம்பெறும். அத்துடன் எதிர்க்கட்சி தலைவர்  சபை முதல்வர் , ஆளும் கட்சி பிரதம கொரடா மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஆகிய முக்கிய பதவிகள் குறித்த நியமனமும் இடம்பெறும். இந்நிலையில் இவை  தொடர்பாக இறுதி தீர்மானங்கள் எடுக்கப்பட்டு இன்றைய தினமே சபாநாயகருக்கு அறிவிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின்  தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்  நடைபெறவுள்ள ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில்  சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சி பிரதம கொரடா பதவிகள் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. சபை முதல்வராக தினேஸ் குணவர்தனவையும் , ஆளும் கட்சி பிரதம கொரடாவாக மஹிந்த  அமரவீரவையும் நியமிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு அந்த தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர் அதனை சபாநாயகருக்கு அறிவிக்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க  தலைமையில் ஶ்ரீ கொத்தாவில் இன்று கூடுகின்றது. இதன்போது எதிர்க்கட்சி பிரதம கொரடா தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. பெரும்பாலும் முன்னாள் அமைச்சர்  கயந்த கருணாதிலக்க அந்த பதவிக்கு நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் குறித்த பதவிகள் தொடர்பாக தனக்கு அறிவிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய கடந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அறிவித்திருந்தார். இதன்படி இன்றைய தினத்திற்குள் அந்த பதவிகள் தொடர்பாக சபாநாயகருக்கு அறிவிக்கப்படவுள்ளது. இதேவேளை பாராளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அடுத்தக் கட்ட சபை நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக நாளை பிற்பகல் சபாநாயகர் தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

நாளை முற்பகல் ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷ  தலைமையில் பாராளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அவரின் அரச கொள்கை விளக்க உரையை தொடர்ந்து பாராளுமன்றத்தை தற்காலிகமாக பிற்பகல் 1 மணி வரையில் ஒத்தி வைத்து 12 மணியளவில் கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்தி அதன் பின்னர் 1 மணி முதல் 6 மணி வரையில் பாராளுமன்ற கூட்டத்தை நடத்தி அங்கு எதிர்க்கட்சி தலைவர் , சபை முதல்வர் , ஆளும் கட்சி பிரதம கொரடா மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம  கொரடா நியமனங்களை அறிவிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.  இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டம் நாளை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.