ஊவா ஹய்லன்ஸ் பெருந்­தோட்ட குடி­யி­ருப்­பா­ளர்கள் மீது தாக்­குதல்

289 0

பெருந்­தோட்ட குடி­யி­ருப்புத் தொகு­திக்குள் நுழைந்த சில கிரா­மிய இளை­ஞர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட  தாக்­குதல் சம்­ப­வத்தால் பண்­டா­ர­வளைப் பகு­தியின் ஊவா ஹய்லன்ஸ் எல்­ல­வெல பிரிவில் மாணவன் அடங்­க­லாக ஐவர் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் மூவரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

நேற்­று­முன்­தினம் நள்­ளி­ரவில் குறித்த தோட்­டப்­ப­கு­திக்குள் நுழைந்த இளை­ஞர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து அப்­ப­கு­தியில் பதற்­ற­மான சூழல் நில­வி­ய­துடன் மக்கள் மிகுந்த அச்­சத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.  இது குறித்து, தோட்ட மக்கள், பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், இலங்கை தேசிய தோட்டத் தொழி­லாளர் சங்க பொதுச் செய­லா­ள­ரு­மான வடிவேல் சுரே­ஷிடம் தக­வல்­களை வழங்­கி­யுள்­ளனர். அதனையடுத்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சம்­பவ இடத்­திற்கு நேரில் சென்று மக்­களின் நிலை­மை­களை ஆராய்ந்­துள்ளார்.

இளை­ஞர்கள் மற்றும் மாண­வர்கள், பெண்கள் என பலரும் இந்­த ­சம்­ப­வத்­தினால் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். இவ்­வாறு காயங்­க­ளுக்­குள்­ளான ஐவர் அட்­டாம்­பிட்­டிய கிரா­மிய அரச வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

இன­வா­த­மிக்க வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளையும் மேற்­கொண்ட பின்­னரே, அவர்கள் தோட்ட மக்கள் மீது தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக பொது­மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

சம்­பவ இடத்­துக்குச் சென்ற  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வடிவேல் சுரேஷ் குறித்த தோட்ட முகா­மை­யாளர் மற்றும் பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரி­யையும் குறிப்­பிட்ட எல்­ல­வெல தோட்டப் பிரி­விற்கு வர­வ­ழைத்து, தோட்ட மக்­களின் பாது­காப்­பினை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தும்­ப­டியும், தாக்­கி­ய­வர்­களை தரா­தரம் பார்க்­காமல் கைது செய்­யும்­ப­டியும், பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரியை கேட்­டுக்­கொண்­டுள்ளார்.

இதற்­க­மைய செயற்­பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி மூன்று இளை­ஞர்­களைக் கைது செய்து விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்தி வருவதுடன் அதே­வேளை அப்­ப­கு­தியின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்துள்ளார்.

இது குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வடிவேல் சுரேஷ் கருத்துத் தெரி­விக்­கையில்,

ஏற்­பட்­டி­ருக்கும் சம்­ப­வத்தை வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றேன். இது­போன்ற மிலேச்சத்தன­மான சம்­ப­வங்கள் பெருந்­தோட்டப் பகு­தி­களில் தற்­போது இடம்­பெற்ற வண்­ண­முள்­ளன. எமது பொறு­மைக்கும் எல்­லை­யுண்டு. இன­வாதம் தற்­போது தலை­வி­ரித்­தா­டு­கின்­றது.

இன்­றைய தினம் (நேற்று) பதுளை மாவட்ட இணைப்­புக்­குழுக் கூட்­டமும், பதுளை அரச செய­ல­கத்தில் இடம்­பெ­று­கின்­றது. முக்­கி­ய­மாக அக்­கூட்­டத்தில் நானும் பங்­கேற்க வேண்டும். ஆனால், எம்­மக்கள் பாதிக்­கப்­படும் போது எனக்கு அக்­கூட்டம் பெரி­தல்ல. ஏன் பாரா­ளு­மன்ற அமர்வும் எனக்கு பெரி­தல்ல. எமது மக்­களின் காவல் கார­னா­கவே நான் இருந்து வரு­கின்றேன். அதனை எனது கொள்­கை­யாகக் கொண்­டுள்ளேன்.

சம்­பவம் கேள்­விப்­பட்­டதும், உடன் எல்­ல­வெல தோட்­டத்­திற்கு விரைந்து, எமது மக்­களின் பாது­காப்பு குறித்து, தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டேன்.

திரு­வெம்­பாவை கால­மாக இருந்து வரு­வ­தினால், எமது மக்கள் இரவு பஜ­னை­களில் ஈடு­ப­டு­கின்­றனர். ஐயப்ப சுவாமியை தரிசிக்கச் செல்லும் சுவாமிகளும் இருந்து வருகின்றனர். ஏற்பட்டிருக்கும் சம்பவத்தினால், இவர்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். இனியும் என்னால் பொறுக்க முடியாது. நல்ல வழியிலோ, கெட்ட வழியிலோ எமது மக்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. எனது உயிரையும் துச்சமாக மதித்து, எமது மக்களை பாதுகாப்பேன். இதுபோன்ற அடாவடித்தனங்களை இனியும் அனுமதிக்க முடியாது என்றார்.