எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அதிகளவில் களமிறங்குவர். எனவே, வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை அதிகரிக்காத பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலை போன்று பாரிய சிக்கலுக்கு முகம் கொடுக்க நேரிடும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.
தற்போது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 70 உள்ளன. இவற்றில் இருந்து ஒவ்வொரு தொகுதிக்கு ஒரு வேட்பாளர் கலமிறக்கும் பட்சத்தில் வேட்பாளர் தொகை அதிகரிக்கும் அதே போன்று சுயேட்சை வேட்பாளர்களும் கலமிறங்கும் பட்சத்தில் இத்தொகை மேலும் அதிகரிக்கும்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் களமிரங்கியமையினால் மேலதிகமாக பாரிய தொகையை செலவிட நேர்ந்தது. இவ்வாறு பொதுத்தேர்தலிலும் அதிக வேட்பாளர்கள் களமிறங்குவார்களாயின் தேர்தல் செலவு பல மடங்கு அதிகரிக்கும்.
1981 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பணத் தொகையே தற்போதும் அறவிடப்படுகின்றது. அக்காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 10 கட்சிகளே இருந்தன. ஆனால் தற்போது நிலைமை வேறு. அக்காலத்துடன் ஒப்பிடுகையில் கட்டுப்பணத்தொகை 50 மடங்கால் அதிகரிக்கப்பட வேண்டும். அதன்படி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியில் போட்டியிடும் வேட்பாளருக்கு முப்பதாயிரம் ரூபாவும் சுயேட்சை வேட்பாளரிடமிருந்து ஐம்பதாயிரம் ரூபாவும் அறவிடப்படவேண்டும்.
கட்டுப்பணத்தொகையை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான திருத்த சட்ட மூலத்திற்கு பாராளுமன்றத்தின் அனுமதியை எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

