திருகோணமலையில் சீரற்ற வானிலையால் 5478 பேர் பாதிப்பு

557 0

திருகோணமலை மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமா பெய்யும் மழையின் நிமித்தம் 1485 குடும்பங்களைச்சேர்ந்த 5478 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று மதியம் அறிவித்துள்ளது.

திருகோணமலையில் வெருகல்,கிண்ணியா,கந்தளாய்,குச்சவெளி,சேருவில மற்றும் தம்பலகாமம் உட்பட்ட பிரதேசங்கள் அதிக பாதிப்புக்கு முகம்கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று அறிவித்தது.

அதன் அடிப்படையில் வெருகல் பிரதேசத்தில் 113 கும்பங்களைச்சேர்ந்த 361 நபர்களும்,கிண்ணியா பிரதேசத்தில் 751குடும்பங்களைச்சேர்ந்த 2910 நபர்களும்,கந்தளாய் பிரதேசத்தில் 1 குடும்பத்தைச்சேர்ந்த 3 நபர்களும்,குச்சவெளி பிரதேசத்தில் 591 குடும்பங்களைச்சேர்ந்த 2116 நபர்களும்,சேருவில பிரதேசத்தில் 28 குடும்பங்களைச்சேர்ந்த 83 நபர்களும், தம்பலகாமம் பிரதேசத்தில் 1 குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று அறிவித்தது.

மேலும் வெருகல் பிரதேசத்தில் 108 குடும்பங்களைச்சேர்ந்த 347 நபர்கள் மாவடிச்சேனை அரசினர் கலவன் பாடசாலை மற்றும் விட்டான் சமுக சேவை நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் சேருவில பிரதேசத்தில் 28 குடும்பங்களைச்சேர்ந்த 83 உறுப்பினர்கள் காமினி வித்தியாலயம் சேறுவில மற்றும் ஸ்ரீ போதிராஜ விகாரையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

மேலும் வெருகல் பிரதேசத்தில் 5 குடும்பங்களைச்சேர்ந்த 14 உறுப்பினர்கள் மற்றும் கிண்ணியா பிரதேசத்தில் 29 குடும்பங்களைச்சேர்ந்த 393 உறுப்பினர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் 9 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது எனவும் அவை கிண்ணியா பிரதேசத்தில் 7 வீடுகள் எனவும்,கந்தளாய் பிரதேசத்தில் 1 வீடு எனவும், தம்பலகாமம் பிரதேசத்தில் 1 வீடு எனவும் அவர்கள் தெரிவித்தனர் .

பாதிப்புக்குள்ளானவர்களுக்குத் தேவையான உதவிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் செய்துக்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.