சர்வாதிகார போக்கில் செல்லும் அரசாங்கம் நெடுநாள் நீடிக்காது முன்னெடுக்கப்பட்டுள்ள அரசியல் பழிவாங்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக தக்க பதிலடியை பெற்றுக் கொடுப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
விகாரமாதேவி பூங்கா வளாகத்தில் இன்று மாலை இடம் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களின் மதவழிபாடு நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு முற்பட்ட அரசாங்கம் ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொண்ட மக்களாணையினை சர்வாதிகாரமான முறையில் பிரயோகித்து தங்களின் தனிப்பட்ட அரசியல் பகைமையினை தீர்த்துக் கொண்டது. நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட முறையற்ற செயற்பாடுகள் இன்று மீண்டும் தலைதூக்கியுள்ளன.
சர்வாதிகாரமான அரச நிர்வாகத்தின் ஆரம்பம் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது பாரிய விளைவினை ஏற்படுத்தி முழுமையாக ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும்.
மக்களாணையினை பெற்று ஆட்சியமைத்துள்ள அரசாங்கம் தற்போது ஜனநாயகத்திற்கு புறம்பாக சர்வாதிகார போக்கில் செல்கின்றது. இந்த அரசாங்கம் நெடுநாள் நீடிக்காது.
முறையற்ற செயற்பாடுகளுக்கு நீதிமன்றத்தின் ஊடாகவே பதிலடியை வழங்குவோம் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மீது முன்னெடுக்கப்பட்ட அரசியல் பழிவாங்கள் அடுத்து எனக்கும் தாக்கம் செலுத்தும் என்பதை உணர்ந்து. சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.
ஜனநாயகத்திற்காக போராடும் பேர்த இன, மத , பேதங்களை துறந்து பொது நோக்கத்துடன் செயற்பட வேண்டும்.
இன்று மீண்டும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. 2015ம் ஆண்டுக்கு முன்னர் இந்நிலைமையே தொடர்ந்தன. ஆகவே போராட்டத்தின் ஊடாகவே பெற்றிப் பெற முடியும் என்றார்.