கோட்டா- சஜித் நாட்டை அடுத்தக்கட்டத்துக்கு முன்னேற்றுவார்கள்-அஜித் பி.பெரேரா

276 0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச வரவேண்டும் என்பதையே பெரும்பான்மையான கட்சியின் உறுப்பினர்கள் விரும்புவதாகவும் எனவே, இதற்கு செவி சாய்த்து ரணில் விக்ரமசிங்க முடிவொன்றை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், 2020 பொதுத் தேர்தலில் தமது கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.

அதற்கமைய அந்த வெற்றிக்கு பின்னர் கோட்டா- சஜித் என்ற இந்த இருவரும் நாட்டை அடுத்தக்கட்டத்துக்கு முன்னேற்றுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையினரும் அமைப்பாளர்களின் பெரும்பான்மையினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.

இந்த தகவலை நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அறிவித்துள்ளோம். எனவே, நாம் இந்த விடயத்தில் எமது தலைவர் சிறப்பான முடிவொன்னை எடுப்பார் என்றே நம்புகிறோம்.

புதிய தலைமுறையினருக்கு இடமளித்து, அவர் ஓய்வுப் பெருவார் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம். இதன் ஊடாக, ஏப்ரலில் வரும் பொதுத் தேர்தலுக்கும் நாம் ஆயத்தமாக இலகுவாக இருக்கும் என நாம் நினைக்கிறோம்.

பெரும்பான்மையினர் இந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள். எனவே, ரணில் விக்ரமசிங்க இதுதொடர்பாக முடிவொன்றுக்கு வந்துவிட்டார் என்றே நாம் நம்புகிறோம்.

ஏப்ரலில் இடம்பெறும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப் பெற்று, சஜித் பிரேமதாஸ பிரதமராவதற்கான சூழ்நிலை அதிகமாகக் காணப்படுகிறது.

அவ்வாறு ஏற்பட்டால், அவர் நிச்சயமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுவார். எனவே, கோட்டா- சஜித் என்ற இந்த இருவரும் நாட்டை அடுத்தக்கட்டத்துக்கு முன்னேற்றுவார்கள் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்” என மேலும் தெரிவித்தார்.