சுவிஸ் தூதரக அதிகாரி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவராக நானே இருக்கின்றேன். இதுவரை நடைபெற்ற விசாரணை களிலிருந்து அவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
இந்த விடயம்தொடர்பில் சுவிஸ் தூதுவரை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.விசாரணை க்கு குறித்த அதிகாரியை பூரணமாக ஒத்துழைக்குமாறு வலியுறுத்தியிருக்கின்றேன் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் தேசிய பத்திரிகைககளின் ஆசிரியர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;
சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவனாக நானே இருக்கின்றேன். இதுவரை நடைபெற்ற விசாரணைகளில் அவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. தொழில்நுட்ப ரீதியான சாட்சிகள், சிசி.ரி.வி. , தொலைபேசி, ஊடான சாட்சியங்கள் ஊபர் சாரதியின் சாட்சியம் அந்த சாரதி தெரிவித்த குறித்த அதிகாரி சென்ற வீட்டரது சாட்சியங்கள் என்பவற்றை வைத்துப் பார்க்கும் போது சம்பவம் இடம்பெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. சுவிஸ் தூதரகமானது பொறுப்புடன் செயற்பட்டிருக்கவேண்டும். சுவிஸ் தூதுவர் பிரதமரை சந்தித்து சம்பவம் தொடர்பில் விசாரணை வேண்டும் என்று கோரியிருந்தார். இதற்கிணங்க உயர்மட்ட விசாரணை இடம்பெற்றது. விசாரணையின் பின் அவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை என்பது உறுதியாகியிருக்கின்றது.
இன்றைய தினம் சுவிஸ் தூதுவரை சந்தித்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடினேன் விசாரணைக்கு ஊழியரை ஒத்துழைக்குமாறு தெரிவிக்கும்படி அவரிடம் நான் கேட்டுக்கொண்டேன்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் சுவிஸ் தூதரகத்தை குற்றம்சாட்ட முடியாது. தூதரகத்தின் ஊழியர் ஒருவருக்கு சம்பவம் நடந்திருந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டியது தூதரகத்தின் கடமையாகும். இதற்கிணங்கவே தூதரகம் செயற்பட்டிருந்தது. நாமும் எமது கடமையினை செய்திருந்தோம்.
இந்த விடயத்தில் நான்தான் பாதிக்கப்பட்டவனாவேன். நான் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் கண்களை கட்டி துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. முறைப்பாடு தெரிவிக்கப்படுவதற்கு முன்னரே நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் கடத்தல் குறித்து செய்தி வெளியாகியிருந்தது. முன்னாள் அமைச்சர்களும் இதற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்திருந்தனர். சஜித் பிரேமதாஸ கூட கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு குறித்த ஊழியர் ஆதரவாக இல்லை. விசாரணைகளின்போதும் சுகவீனமாக உள்ளதாகவும் வேறு காரணங்களையும் அவர் கூறி வருகின்றார். இதுவரையான தொழில்நுட்ப ரீதியான சாட்சியங்களின் அடிப்படையில் இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை என்றே தெரிகின்றது. ஏன் இவ்வாறான நடவடிக்கையில் அந்த ஊழியர் ஈடுபட்டார் என்பது குறித்து ஆராயவேண்டியுள்ளது. சரியான முழுமையான விசாரணை முடிவுக்கு வந்த பின்னரே இது குறித்து தெரியவரும்.
கேள்வி: தேர்தல் பிரசாரத்தின்போது வெள்ளைவான் விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன செய்தியாளர் மாநாட்டில் குற்றம் சுமத்தியிருந்தார். அந்த குற்றச்சாட்டுக்கும் சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவகாரத்திற்குமிடையில் தொடர்பு இருக்குமா?
பதில்: முதலைக்கதைக்கும் இந்த சம்பநத்திற்குமிடையில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன அரசியல்வாதி, அரசியலில் பொய் சொல்வது என்பது வழமையான செயற்பாடு. இந்த கலாசாரத்தை மாற்றியமைக்கவே நான் விரும்புகின்றேன். தேர்தல் பிரசாரக்காலத்தில் இவர்கள் மேற்கொண்ட இத்தகைய பொய்ப்பிரசாரங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வெள்ளைவேன் கடத்தல் தொடர்பான செய்தியாளர் மாநாடு இடம்பெற்றதையடுத்து எனக்கு 2 இலட்சம் வாக்குகள் வரையில் கூடுதலாக கிடைத்தது. இதேபோன்று நாலு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் இன்னும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்க முடியும் .
தமிழ், முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் எனக்கு இன்னும் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கும். அழுத்தங்கள் காரணமாகவே தமிழ், முஸ்லிம் மக்கள் இவ்வாறன தீர்மானத்தை எடுத்திருந்தார்கள். சிங்கள மக்கள் அரசியல்வாதிகளின் பொய் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அவற்றை நிராகரித்து வாக்களித்துள்ளார்கள்.