பதவிகளை பகிர்ந்துக் கொண்டு முன்னோக்கி செல்வோம்- லக்ஷமன்

207 0

அனைவரும் சமரசத்துடன் இருக்கும் பதவிகளை பகிர்ந்துக் கொண்டு கட்சியை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டுமென்பதையே எதிர்பார்க்கின்றோமென நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். லக்ஷமன் கிரியெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஒருமனதாக சஜித் பிரேமதாசவிற்கு நாம் வழங்கினோம்.

அந்தவகையில் நாடாளுமன்ற அமர்வின்போதே எதிர்க்கட்சித் தலைவர் அறிவிக்கப்படுவார்.

அதாவது எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டதை அடுத்து இடம்பெறவுள்ள நிகழ்வுகளின் பின்னர் பிற்பகல் அளவில் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்படுவார் என சபாநாயகர் எனக்கு தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்றத்தை எதற்காக ஒத்தி வைத்தார்கள் என்று தெரியவில்லை. கோப் குழுவின் அறிக்கையை மறைப்பதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் ஒரு மாதம் என்பது பாரிய காலமாகும்.

இதேவேளை தற்போதுள்ள சூழ்நிலையில், அனைவரும் இருக்கும் பதவிகளை பகிர்ந்துகொண்டு ஐக்கிய தேசியக்கட்சியை முன்னோக்கி கொண்டுச் செல்வதே சிறந்ததாகும்” என குறிப்பிட்டுள்ளார்.