நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்த காலத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் குறித்து சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை ஸ்தாபிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார் என்று தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்னுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு பாராளுமன்ற தேர்தலின் ஊடாக கிடைக்கப் பெறும். மக்களுக்கும், அரச நிர்வாக கட்டமைப்பிற்கும் தேவையான விதத்தில் அரசியலமைப்பின் 19வது திருத்தம் மாற்றியமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
நல்லாட்சி அரசாங்கத்தில் மக்கள் மீதான சேவைக்கும், அபிவிருத்திக்கும் காட்டிய அக்கறையினை காட்டிலும் அரச ஊழியர்கள் மீது அரசியல் பழிவாங்கலுக்கு முக்கியத்துவம் காண்பிக்கப்பட்டது. இவ்வாறு பழிவாங்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைக்க வேண்டும் என்பதுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவினால் பின்வரும் விடயதானங்களை உள்ளடக்கிய அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டு உயர்பதவிகள் வழங்க மறுக்கப்பட்டமை, நீதிக்கட்டமைப்பில் அரசியல் செல்வாக்கு,அரசியல் பழிவாங்கலை இலக்காகக் கொண்டு நிறுவனங்கள் ஸ்தாபிப்பு, உள்ளிட்ட பிரதான விடயங்களை அடிப்படையாகக் கொண்ட பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்திற்கு அமைய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்ட அரச ஊழியர் தொடர்பிலும், பொறுப்புக்களை தவறாக செயற்படுத்தியர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்யவேண்டும்.
சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய 06 வார காலத்திற்குள் அமுலுக்கு வரும் வகையில் விசாரணை ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும் என்று பிரதமர் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி ஆட்சேபிக்கப்பட்டது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, நிதி குற்றப்புலனாய்வு பிரிவு(எப்.சி.ஐ. டி),உள்ளிட்ட சிறப்பு விசாரணை பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் ஆராயவேண்டும். ஆணைக்குழுவின் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு சட்டமாதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் பழிவாங்களுக்கு உட்படுத்தப்படும் அரச ஊழியர்களுக்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாத வகையிலும் இருப்பதற்கு பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்வதற்கும் இந்த அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக அனுமதி கோரப்பட்டுள்ளது.
கேள்வி-:இடைக்கால அரசாங்கத்திற்கு பொதுத்தேர்தலில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமா ?
பதில்-:நிச்சயம் கிடைக்கப் பெறும் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பலமான அரசாங்கம் முன்னெடுத்து செல்லப்படும்.
கேள்வி-:அரசியலமைப்பின் 19வது திருத்தம், 13ஆவது திருத்தம் ஆகியவற்றை நீக்கும்
முயற்சியினை அரசாங்கம் முன்னெடுப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது உண்மையா ?
பதில்-:அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில் பல்வேறு முரண்பாடான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. மக்களுக்கு பொருத்தமற்ற பாராளுமன்றத்தினை கலைக்கும் அதிகாரம் கூட ஜனாதிபதியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்களின் தேவைகளுக்காகவும், சிறந்த அரச நிர்வாகத்திற்காகவும் இத்திருத்தம் மீள்பரிசீலனை செய்யப்படும்.
அரசியலமைப்பின் 13வது திருத்தம் மாகாண சபை முறைமையினை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டது. மாகாண சபை முறைமையினை இல்லாதொழிப்பது சர்வதேச மட்டத்தில் தவறான ஒரு நிலைப்பாட்டை தோற்றுவிக்கும்.
கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்களின் தனிப்பட்ட பகைமையினால் மாகாண சபை தேர்தல் தொடர்பில் எந்நிலையிலும் கருத்துரைக்கவில்லை. மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்தும் நிலைப்பாட்டிலே அரசாங்கம் உள்ளது.
கேள்வி:- முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சி தலைவராக பரிந்துரைத்துள்ளமை இடைக்கால அரசாங்கத்திற்கு சவால் இல்லையா ?
பதில்-: எவ்வித தடையும் கிடையாது ஐக்கிய தேசிய கட்சியின் பலவீனமான அரசாங்கத்தினை ஜனாதிபதி தேர்தலில் புறக்கணித்த மக்கள் நிச்சயம் அதன் உறுப்பினர்களையும் இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் புறக்கணிப்பார்கள்.
கேள்வி:- சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் விவகார விசாரணைகள் தற்போது எந்நிலையில் காணப்படுகின்றன ?
பதில் : கடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் விவகாரம் தூதரக இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு அவப்பெயரினை ஏற்படுத்தும் விதமாகவே இந்த சூழ்ச்சி காணப்படுகின்றமையினால் இவ்விடயத்தை பொறுமையாக கையாள வேண்டியுள்ளது.
பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் தூதரக அதிகாரி இதுவரையில் எமது நாட்டின் பொதுசட்ட விடயங்களுக்கு அமைய எவ்வித வாக்குமூலத்தினையும், தெளிவுபடுத்தலையும் வழங்கவில்லை. ஆகவே காலம் தாழ்த்தப்படுவதற்கான நோக்கம் மற்றும் இதன் பின்னணியில் உள்ளவர்கய் யார் என்பதையும் பொறுமையுடன் கண்டுப்பிடிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது என்றார்.