ஈராக்: போராட்டக்காரர்கள் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 16 பேர் பலி; 47 பேர் காயம்

299 0

இராக்கில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். 47 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், ”இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள கலானி சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியாகினர். 47 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பற்றிய முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

அக்டோபர் மாதம் முதல் இராக்கில் நடக்கும் போராட்டத்தில் 400க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இதன் காரணமாக இராக்கின் ஷியா மதகுருமார்கள், இராக் பிரதமர் மஹ்தி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக இராக் பிரதமர் அதில் அப்துல் மஹ்தி அறிவித்தார். இந்நிலையில் அப்துல் மஹ்தியின் ராஜினாமாவை இராக் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது. எனினும் அப்துல் மஹ்தியின் ராஜினாமாவுக்குப் பிறகும் இராக்கில் ஆங்காங்கே வன்முறை நீடித்து வருகிறது.