ஈரானில் நடந்த போராட்டத்தில் சுமார் 1000 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா தரப்பில், ”ஈரானில் சமீபத்தில் நடந்த வன்முறையில் சுமார் 1000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம். மேலும் கைது செய்தவர்கள் சித்தரவதைக்குள்ளாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் காரணமாக ஈரான் மீது பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதிக்கலாம் என்றும் ஈரானுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி பிரைன் ஹுக் தெரிவித்துள்ளார்.
ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடந்த மாதம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. பலர் கொல்லப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஈரான் அரசு வெளியிடாமல் இருந்து வந்தது.
இதற்கிடையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என்று ஆம்னெஸ்டி தெரிவித்திருந்தது. ஆனால், இதற்கு ஈரான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் கலவரங்களின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக ஈரான் குற்றம் சுமத்தியது.
இந்நிலையில் ஈரான் போராட்டத்தில் சுமார் 1000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

