அமெரிக்க அதிபருக்கு எதிரான புகார் முதல் நாள் விசாரணையில் ட்ரம்புக்கு ஆதரவு

265 0

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிரான புகார் தொடர்பாக நடைபெற்ற முதல் நாள் விசாரணை ட்ரம்புக்கு ஆதரவாக இருந்தது என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்
டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை அதிபர்ஜோ பிடென் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஜோ பிடெனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உக்ரைன் நாட்டில் அவரும், அவரது மகன் ஹன்டாரும் நடத்தி வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்; இதை செய்யாவிட்டால் உக்ரைனுக்கு வழங்கப்படும் தீவிரவாத ஒழிப்பு நிதியை நிறுத்தி விடுவோம் என அந்த நாட்டு
அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு அதிபர் ட்ரம்ப் நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, ட்ரம்ப் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக கூறி அவரை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் தொடங்கினர். ஒரு மாதத்துக்கும் மேலாக அமெரிக்க நாடாளுமன்ற புலனாய்வுக் குழு இந்த விசாரணையை நடத்தி வருகிறது. அதில் முதல் கட்டமாக நடைபெற்ற விசாரணையில் அமெரிக்க தூதர்கள் 2 பேர் ட்ரம்புக்கு எதிராக சாட்சியம் அளித்தனர்.

இந்நிலையில் ட்ரம்ப் சொந்தலாபத்துக்காக தனது அதிகாரத்தை பயன்படுத்தினாரா என்பது குறித்து நாடாளுமன்ற புலனாய்வுக் குழு அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியது. ஆனால் விசாரணை நடைமுறைகளில் அடிப்படை நேர்மை இல்லை என கூறி ட்ரம்ப் இந்த விசாரணைக்கு ஆஜராக மறுத்து விட்டார். இந்நிலையில் பதவி
நீக்க விசாரணையை நடத்தி வரும் நாடாளுமன்ற புலனாய்வுக் குழு 300 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. அதில்,

‘‘தனது அரசியல் எதிரியான முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் மீது விசாரணையை அறிவிக்க உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்க அதிபர் ட்ரம்ப் தனதுஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன’’ என கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த அறிக்கையை வெள்ளை மாளிகை புறக்கணித்துள்ளது. இந்நிலையில் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தினாரா என்ற புகார் தொடர்பாக சட்டநிபுணர்களின் முன்னிலையில் நேற்று விசாரணை நடைபெற்றது.

அது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விசாரணையின் முதல் நாள் அதிபர் ட்ரம்புக்கு நல்ல நாளாக அமைந்தது. அதே நேரத்தில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இது கெட்ட நாளாக அமைந்துள்ளது. விசாரணையின்போது நீதி விசாரணைக்குழுவில் இடம்பெற்ற நான்கில் 3 சட்ட நிபுணர்கள், ட்ரம்ப் தனது அதிகாரத்தை மீறவில்லை என்று தெரிவித்தனர். ட்ரம்ப் எந்தத் தவறையும் செய்யவில்லை என்று 4-வது சட்ட நிபுணர் தெரிவித்தார்.