எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இறுதி தீர்மானம்- ஐ.தே.க.வின் கூட்டம் ஆரம்பம்

287 0

எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது.

குறித்த கூட்டம் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர் யாரென்பது தொடர்பாக ஐ.தே.கவுக்குள் கடும் சர்ச்சைகள் எழுந்ததைபோன்று ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் யாரென்பது தொடர்பாகவும் கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன.

அதாவது கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டுமென கட்சியின் ஒரு தொகுதியினரும் ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டுமென இன்னுமொரு தொகுதியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதேவேளை 40 பேரின் கையொப்பத்துடன், ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசமும், 57 பேரின் கையொப்பத்துடன் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு தெரிவித்து சஜித் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகருக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.