புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதாகிய மாணவனுக்கு சிறைச்சாலையில் இருந்து பரீட்சை எழுத அனுமதி

202 0

வவுனியா, அண்ணாநகர் பகுதியில் சகோதரர்களுடன் இணைந்து வீட்டில் புதையல் தோண்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவன் சிறைச்சாலையில் இருந்து பரீட்சை எழுதுவதற்கு வவுனியா பதில் நீதவான் ஆருரன் அனுமதி வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, அண்ணாநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதையில் தோண்டியதாக மூன்று சகோதரர்களை வவுனியா பொலிசார் நேற்று (01.12) காலை கைது செய்திருந்தனர். அதில் ஒருவர் இம்முறை கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 16 வயது மாணவன் ஆவார்.

இந்நிலையில் குறித்த மூவரையும் வவுனியா பதில் நீதவான் ஆருரன் அவர்களில் இல்லத்தில் முற்படுத்திய போது குறித்த மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மாணவன் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளதால் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு பதில் நீதவானிடம் முன்வைத்திருந்தார். குறித்த வழக்கினை கவனத்தில் எடுத்த பதில் நீதவான் பிணை விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், சிறைச்சாலையில் இருந்து பாடசாலைக்கு சென்று பரீட்சை எழுத அனுமதி வழங்கினார்.

அதனடிப்படையில் குறித்த மாணவன் இன்று பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.