மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் நுவரெலியா – இடம்பெயர்வு அதிகரிப்பு

320 0

நுவரெலியாவில் அதிக மழையுடான சீரற்ற வானிலை காரணமாக 92 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 5 மணிமுதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிவரையிலான காலப்பகுதியில் இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவேவேளை, மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக வலப்பனை, கந்தப்பளை பிரதேசங்களில் பாதிப்புகள் அதிகமாக காணப்படுவதாகவும் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொகவந்தலாவை, நோர்வூட், அக்கரப்பத்தனை, டயகம, மற்றும் மாகாஸ்தோட்ட ஆகிய பகுதிகளிலும் வெள்ளநீர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சேத விவரங்கள் அப்பகுதி கிராமசேவகரிடத்தில் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான வீதிகளில் மண்சரிவுகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளதாகவும் மண்களை அகற்றும் பணிகள் முன்னடுக்கப்பட்டு வருவதுடன், ஆற்று ஓரங்கள் மற்றும் மண்மேட்டு பகுதிகளில் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிப்புகள் ஏற்படும் நிலை கண்டறியப்பட்டால் அப்பகுதி கிராமசேவகர்கள் ஊடாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கவனத்திற்கு கொண்டுவரும்படி வேண்டுகோள் விடுப்பதாகவும் நுவரெலியா இடர்பாடுகள் முகாமைத்துவ உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.