இடைக்­கால கணக்கறிக்கையை சமர்ப்­பிக்க புதிய அரசு முடிவு..!

369 0

புதிய ஜனா­தி­பதி பத­வி­யேற்ற கையோடு பொது மக்­களின் பொரு­ளா­தார சுமையை குறைக்கும் வகையில் வரிச் சுமைகள் குறைக்­கப்­பட்­டுள்­ளன. இதன் மூலம் பொருட்கள், சேவை­களின் விலை­வா­சிகள் கணி­ச­மான அளவு குறையும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அடுத்த பொதுத் தேர்தல் வரை­யான சுமார் மூன்று மாத காலப்பகு­திக்கு  அரசு இவ்­வா­றான மேலும் சலு­கை­களை  வழங்­கலாம் என்றும் அடுத்த வரு­டத்­துக்­கான வரவு செலவு திட்டம் பொதுத் தேர்­தலைத் தொடர்ந்து வெற்றி பெறும் மத்­திய அரசால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் மூன்­றா­வது கூட்­டத்­தொடர் இன்று அல்­லது நாளை முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அதற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அர­சாங்­கத்தின் நம்­பத்­த­குந்த தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தின் கூட்­டத்­தொ­டரை முடி­வுக்கு கொண்­டு­வந்து புதிய பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரை எதிர்­வரும் 12 ஆம் திகதி ஆரம்­பிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் நான்­கா­வது கூட்­டத்­தொடர் ஆரம்­பத்தில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தனது அக்­கி­ரா­சன உரையில் புதிய அர­சாங்­கத்தின் கொள்கைத் திட்­டங்­களை அறி­விக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்கள் வழங்­கிய ஆணைக்கு மதிப்­ப­ளிக்கும் வகையில்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் பதவி வில­கி­யதை அடுத்து மஹிந்த ராஜ­பக்ஷ பிர­த­ம­ராக பத­வி­யேற்று அவர் தலை­மையில் இடைக்­கால அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டது.

தற்­போ­தைய பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வது குறித்து பல்­வேறு கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று வந்த நிலையில் பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரை முடி­வுக்கு கொண்டு வரு­வது குறித்த செய்தி வெளி­யா­கி­யுள்­ளது. பாரா­ளு­மன்றம் நாளை மறு­தினம் 3 ஆம் திகதி வரை ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்­கான அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு உள்ள நிலையில் கூட்­டத்­தொடர் முடி­வுக்கு கொண்டு வரப்­படும் திகதி மற்றும் புதிய கூட்­டத்­தொடர் ஆரம்­பிக்கும் திகதி, நேரம் என்­பன வர்த்­த­மானி ஊடாக வெளி­யி­டப்­படும்.

மேலும் 19 ஆம் திருத்­தச்­சட்­டத்­திற்கு அமை­வாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திக­திக்கு பின்னர்  தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தை கலைக்கும் அதி­கா­ரமும் ஜனா­தி­ப­திக்கு உள்ள நிலையில் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் பொதுத்­தேர்தல் நடைப்­பெறும் சாத்­தியக் கூறுகள் காணப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே வேளை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­திக்கு அரச செல­வி­னங்­க­ளுக்­கான இடைக்­கால கணக்­க­றிக்கை ஒன்று கடந்த அர­சாங்­கத்­தினால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரத்தை பெற்றுள்ள நிலையில் மார்ச் மாதம் தொடக்கம் அடுத்த வரவூ செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள காலப்பகுதிவரையான காலத்திற்கு மற்றுமொரு இடைக்கால கணக்கறிக்கையை பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.