மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று இரவு வரை அமுலில்

336 0
சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று இரவு 7.30 மணி வரையில் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை நீடிக்கக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கடமையில் ஈடுபட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி நதிக்க ரணவீர தெரிவிக்கையில் வடக்கு, வடமேல் மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் இந்த காலநிலை காணப்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் மழையுடன் கூடிய கடும் காற்றும் இடி மின்னல் தாக்கமும் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை இன்று அதிகாலை உல்ஹிட்டிய ரத்கித நீர்த்தேக்கத்தின் ஏழு வான்கதவுகள் திறக்கப்பட்டன. தொடர்ச்சியாக அந்தப் பகுதியில் பெய்துவந்த கடும் மழை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டின் ஏனைய நீரேந்து நிலைகளின் நீர்மட்டமும் அதிகரிப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.