முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கட்சியின் மத்திய குழு கூடவுள்ளது. சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இன்று மத்திய குழு கூடவுள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இன்றைய மத்திய குழு கூட்டத்தில் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும், சுதந்திர கட்சியின் அடுத்த கட்ட அரசியல் முன்னெடுப்புக்கள் குறித்தும் ஆராயப்படும். ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துள்ளமைக்கமைய, புதிய ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் நாமும் பயணிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் இன்றை மத்திய குழுவில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.
இதன் போது பாராளுமன்ற கலைப்பு குறித்து வினவியதற்கு பதிலளித்த அவர்,
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஆராய்வதற்காகவே மத்திய குழு கூடவுள்ளதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற கலைப்பு குறித்து சுதந்திர கட்சி இது வரையில் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை. எனவே மார்ச் மாதத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதாக தீர்மானித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை கோரப்பட்டால் மாத்திரமே அது குறித்து ஆராயப்படும்.
அவ்வாறு அறிவிக்கப்பட்டால் அது தொடர்பான யோசனை கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னரே அந்த யோசனை தொடர்பில் ஆராய்ந்து தீர்வொன்று எடுக்கப்படும். எனவே பாராளுமன்றத்தை கலைப்பதற்கு மூன்றில் இரண்டு கோரப்பட்டால் அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இப்போது கருத்து தெரிவிக்க முடியாது.
எனினும் பொதுத் தேர்தலுக்கு செல்வதாக இருந்தாலும் அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பிலும் ஏனைய அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையில் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியமாகும்.
மத்திய குழு கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்படும். அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கவி;ல்லை. மத்திய குழு கூட்டத்தில் இதனைத் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.