இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறங்கிய நந்தசேன கோத்தாபய ராஜபக்ஷ வெற்றியீட்டிருப்பதுடன், இன்றைய தினம் ஏழாவது ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
கோத்தாபய ராஜபக்ஷ டி.ஏ.ராஜபக்ஷ மற்றும் டந்தினா ராஜபக்ஷ ஆகியோரின் மகனாக 1949ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி வீரகெட்டியவில் பிறந்தார்.
தனது பாடசாலைக் கல்வியை ஆனந்தா கல்லூரியில் பெற்றுக்கொண்ட கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பை நிறைவுசெய்தார்.
அனோமா ராஜபக்ஷவை திருமணம் செய்து கொண்டதுடன், அவர்களுக்கு மனோஜ் என்ற மகனொருவர் உள்ளார்.
இலங்கை இராணுவத்தில் கடட் அதிகாரியாக 1971ஆம் ஆண்டில் இணைந்துகொண்ட கோத்தாபய ராஜபக்ஷ, லெப்டினன் கேணல் தரம் வரை உயர்த்தப்பட்டு 20 வருடகாலம் இராணுவத்தில் பணியாற்றினார்.
1992 ஆம் ஆண்டில் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று அமெரிக்காவுக்குச் சென்று அவரது குடும்பத்தினருடன் வசித்துவந்தார்.
பின்னர் 2005ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரை அப்பதவியை வகித்தார்.
இந்நிலையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.
அவர் நேற்று முன்தினம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி, இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக இன்று திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.