வெளிநாட்டு தூதர்கள் யாரும் மஹிந்தவை சந்திக்க விரும்பவில்லை – சரத்

268 0

மஹிந்தவின் ஆட்சி காலத்தில் வெளிநாட்டு தூதர்கள் யாரும் அவர்களை சந்திக்க விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெள்ளைவான் கலாசாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே ஒழிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “2015 வெற்றிக்காக நீங்கள் அளித்த ஆதரவைப் போன்று வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் சஜித் பிரேமதாசவையும் ஆதரிக்க வேண்டும்.

அதற்கு முன்பு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் நரகத்தில் வாழ்ந்தோம். அதைப்போன்ற உணர்விலே இருந்தோம்.

வெள்ளை வேன் கலாசாரம் எமது ஆட்சிக்காலத்தில் தான் ஒழிக்கப்பட்டது. மஹிந்தவின் ஆட்சி காலத்தில் வெளிநாட்டு தூதர்கள் யாரும் அவர்களை சந்திக்க சந்திக்க விரும்பவில்லை. அவர்கள் சமாதானத்தை விரும்பவில்லை என்பதே இதற்கு காரணம்.

லிபியாவில் சர்வாதிகாரியாக கடாபியை மகிந்த ராஜபக்ஷ சந்தித்து வந்தபின்னர் அந்த நாட்டு மக்களே புரட்சி செய்து கொன்றனர். அதே போன்றே மஹிந்த அரசியல் புரட்சி மூலம் தூக்கியெறியப்பட்டார்.

தர்கா நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரம் கோட்டாபய ராஜபக்ஷ விருப்பத்திற்காக மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் ஒரு யுத்தத்தை இந்த நாட்டு மக்கள் விரும்பவில்லை. ஒரு நாட்டிற்குள் இன்னோரு இனம் இரண்டாம் குடிமக்களாக வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை.

மீண்டும் ஒரு யுத்தம் இந்த நாட்டில் இடம்பெற விடமாட்டோம். சஹரான்கள் உருவாகவும் விடமாட்டோம். அவர்களை ஆதரிப்போரையும் கண்காணித்து நல்வழிக்கு கொண்டு வருவோம்.

இதேவேளை, நானே கல்முனைக்கு வந்து சிறப்பான தீர்விற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பேன். சஜித் பிரேமதாசவை விசுவாசியுங்கள்” என தெரிவித்தார்.