வடகிழக்கு தமிழ், முஸ்லிம்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் – அமீர் அலி

209 0

ரோசத்தோடும் மானத்தோடும் இருக்கும் சிறுபான்மைச் சமூகம் யாரும் அவர்களுடைய வாக்குகளை கோத்தாபய ராஜபக்ஸவுக்கு வழங்க மாட்டார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து வாழைச்சேனை – செம்மண்ணோடையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

இத் தேர்தலானது தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் இருப்பையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் தேர்தலாகும். இது கோயில்கள், மத்ரசாக்கள், பள்ளிவாசல்கள் போன்றவற்றை தக்க வைத்துக் கொள்வதற்கான தேர்தலாக காணப்படுகின்றது.

எனவே குறிப்பாக வடகிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் சிந்தித்து செய்யப்பட்டு அதிகப்படியான வாக்குகளை சஜித் பிரமதாசாவுக்கு அளிக்க வேண்டும்.

எதிரணியினரின் கட்சியில் ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கும், நினைத்துப் பார்ப்பதற்கும் ஒரு தலைவர் கூட கிடையாது. இது வாழ்வாதாரப் போராட்டம் இந்த நாட்டிலே உள்ள முஸ்லிம், தமிழர்களுக்கான போராட்டம், இந்த நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு வெளிப் பிரதேசங்களில் வாழுகின்ற முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கான போராட்டம், மலையகத் தமிழர்களைப் பாதுகாப்பதற்கான போராட்டம், இந்தப் போராட்டம் தோல்வி அடையுமாக இருந்தால் கடலும் கூட எமக்கு கை தராது என்பதை முஸ்லிம், தமிழ் சமூகங்கள் விளங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.