மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 28ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநர் ரஞ்சித் தென்னகோனிடம் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர்,
தீபாவளி பண்டிகையானது ஞாயிற்றுக்கிழமை (27) அன்று கொண்டாடப்படவுள்ளது. மறுநாள் 28ஆம் திகதி மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆசிரியர்களும் பெற்றோர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அநேகமான பாடசாலைகளில் தீபாவளி தினத்தின் மறுநாள் மாணவர்களின் வருகை மிகக்குறைவாகவே காணப்படும். இதன் காரணமாக அன்றைய தினம் பாடசாலை நடவடிக்கைகளை முழுமையாக முன்னெடுக்க முடியாது.
ஆகவே அன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறையினை அறிவித்து மீண்டும் விடுமுறை நாட்களான சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் குறித்த விடுமுறை தின கல்வி நடவடிக்கையினை முன்னெடுக்க முடியும் என மேலும் தெரிவித்தார்.

