செம்மரம் வெட்டியதாக 126 தமிழர்கள் ஆந்திராவில் கைது

302 0

201610301033161062_semmaram-abduction-126-tamils-arrested-in-andhra-pradesh_secvpfஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 126 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடப்பா ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடப்பா வனப்பகுதியில் செம்மரம் வெட்டப்படுவதாக ஆந்திர வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, லங்கமல்லா வனப்பகுதியில் வன அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு செம்மரங்களை வெட்டி கடத்தி கொண்டிருந்த 83 தமிழர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தமிழர்களிடம் இருந்து 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான 42 செம்மரங்கள் மற்றும் 4 வாகனங்கள் ஆகியவற்றை ஆந்திர வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கைதான 83 பேரும் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலம் கடப்பாவை சுற்றியுள்ள பொதட்டூர் வனப்பன்டா, காஜிப்பேட்டை, பத்வேல் உள்ளிட்ட இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், கடப்பா வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் பலர், பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆந்திர போலீசார், வனப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மேலும் 43 தமிழர்கள் பிடிபட்டனர்.

இவர்களும் வேலூர், திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 43 தமிழர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 24 செம்மரக் கட்டைகள், 3 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 126 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடப்பா ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில், செம்மரம் வெட்ட சென்றதாக 32 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்குகள் பதிந்து ஜெயிலில் அடைத்தனர். 32 தமிழர்களையும் மீட்க தமிழக அரசு சிறப்பு வக்கீல்களை அமைத்து வாதாடி வருகிறது.

ஆனால், 32 தமிழர்கள் மீதான ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்படுகிறது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள 126 பேர் மீதும் ஜாமீனில் வரமுடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.