கோட்டாபய மேற்கொண்ட குற்றங்கள் அனைத்தும் தற்போது வெளியில் வந்துள்ளன – சரத்

193 0

பிரசாரக் கூட்டங்களுக்கு வருகைத் தரும் மக்களின் எண்ணிகையை வைத்து, ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஒருபோதும் கணித்துவிட முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில், நேற்று(செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாம் எமது பிரசாரங்களை ஆரம்பிக்கவில்லை.

இந்த நிலையில் இதனை பின்னடைவு என்று கூறமுடியாது. கட்சியில் கடந்த காலங்களில் இருந்த அனைத்து சர்ச்சைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

இனிமேல், எமது தரப்பு வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதே எமது பிரதான நோக்கமாகும். கடந்த காலங்களில் எம்முடன் ஒன்றிணைந்து பணியாற்றிய அனைவரும் இன்றும் எம்முடன் இருக்கிறார்கள்.

இதனை பொதுஜன பெரமுனவினருக்கு பொறுத்துக்கொள்ள முடியாத காரணத்தினால்தான் எம்மீது தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள்.

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியானவுடன், என்னை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பதாகக் கூறியுள்ளார்.

இதனை இன்று குற்றவாளிகள் எதிர்த்து வருகிறார்கள். எனினும், நான் எவ்வாறான பாதுகாப்புப் பணிகளை கடந்த காலங்களில் மேற்கொண்டேன் என்பதை மக்கள் அறிவார்கள்.

கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட குற்றங்கள் அனைத்தும் தற்போது வெளியில் வந்துள்ளன. அவர் போட்டியிடுகிறார் என்று அவர் மீதான வழக்குகளை இல்லாது செய்ய முடியாது.

இந்தத் தேர்தலில் எமது வெற்றி உறுதியாகிவிட்டது. பிரசாரக்கூட்டங்களில் உள்ள தலைகளை வைத்து ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை கணித்துவிட முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.