யாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை

195 0

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விமானத்தில், இந்தியாவில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து நாளை மறுதினம் வியாழக்கிழமை திறந்து வைக்கவுள்ளனர்.

இதன்போது, சென்னையில் இருந்து வரும் அலையன்ஸ் எயார் விமானம் ஒன்று தரையிறங்கவுள்ளது.

இந்த விமானத்தில் விமானத்துறையைச் சார்ந்த விருந்தினர்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்படவுள்ளனர்.

இவர்களை வரவேற்கும் நிகழ்வில் ஜனாதிபதியும் பிரதமரும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டதும் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் இருந்து வாரத்தில் மூன்று சேவைகளை நடத்தவுள்ளதாக அலையன்ஸ் எயர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்திய நிபுணர்கள் குழுவொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) பலாலிக்கு விஜயம் செய்யவுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை பரிசீலனை செய்து, இந்திய அரசாங்கத்திடம் இறுதி அறிக்கையை கையளிக்கும் நோக்கிலேயே இந்த குழு இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.