விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி நிதிமோசடியில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்!

167 0

மேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி, பல்வேறு நபர்களிடம் நிதிமோசடியில் ஈடுபட்டவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம்- சாவகச்சேரி நுணாவில் கிழக்கைச் சேர்ந்த சதாசிவம் தியாகராஜா என்பரையே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.

அம்பாறை- காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு 19 இலட்சத்து 60ஆயிரம் ரூபாய் மற்றும் 12 இலட்சம் ரூபாய்களை பெற்று நிதிமோசடியில் இவர் ஈடுபட்டதாக விசேட நிதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சந்தேகநபருக்கு எதிராக சில தினங்களுக்கு முன்னர் பகிரங்க பிடிவிறாந்து வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெளிநாட்டிலுள்ள தனது பிள்ளைகளை சந்தேகநபர் பார்வையிடுவதற்காக இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலை அடுத்து அங்கு சென்ற விசேட நிதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்  அவரை கைது செய்து,  கல்முனை நீதவான் நீதிபதி ஐ.என் றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது சந்தேகநபர் சார்பில் வாதத்தை முன்வைத்த சட்டத்தரணிகள், “அவர் நிதி மோசடியில் ஈடுபடவில்லை”  என  கோரி பிணை விண்ணம் கோரினர்.

எனினும் சந்தேகநபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும்  இதனால் அவரது பிணை விண்ணப்பத்தை இரத்து செய்யுமாறு பொலிஸ் தரப்பில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கை விசாரணைக்குட்படுத்திய பின்னர் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை  நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.