இலங்கைக்கு கடத்தவிருந்த 3 தொன் கடல் அட்டைகளுடன் இருவர் கைது

178 0

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 3200 கிலோ கிராம் கடல் அட்டைகளுடன் நாட்டுப் படகு ஒன்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

மன்னார் வளை குடா கடல்  பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக  இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக மண்டபம் வனத்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை முதல் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில்  ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதன் போது  மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே கடலில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த நாட்டுப் படகை சோதனை செய்ய முயன்ற போது வனத்துறை அதிகாரிகளை கண்டதும் இருவர் படகில் இருந்து கடலில் குதித்து தப்பிக்க முயற்ச்சித்தனர் .

அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்த வனத்துறையினர் நாட்டு படகை சோதனை செய்தனர்.

அப்போது படகில்  261 மூடைகளில் 3,200 கிலோ  எடை கொண்ட பதப்படுத்தப்படாத  கடல் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்து  கடத்தல் காரர்களுடன் கடல் அட்டைகள், நாட்டுப்படகை பறிமுதல் செய்த   அதிகாரிகள் மண்டபம் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இலங்கைக்கு கடத்துவதற்க்காக பதுக்கி வைக்கப்பட்ட 3200 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகள் இருந்து தெரிய வந்ததையடுத்து கடத்தலில் ஈடுபட்ட வேதாளை பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது (31) மற்றும் கருப்பையா (45) ஆகிய இருவரையும் கைது செய்ததுடன் படகையும் கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்து விசாரனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் படகின் மதிப்பு 40 இலட்சம் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.