வெள்ளப்பெருக்கு – பவானி ஆற்றில் சிக்கிய 51 பேர் 4 மணி நேரம் போராடி மீட்பு

199 0

பவானி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 51 சுற்றுலா பயணிகளை 4 மணி நேர போராட்டத்துக்கு பின் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.பவானி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 51 சுற்றுலா பயணிகளை 4 மணி நேர போராட்டத்துக்கு பின் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை உள்ளது. இந்த அணை நீரை ஆதாரமாக கொண்டு பவானி ஆறு ஓடுகிறது. இந்த ஆறு பாய்ந்தோடி வரும் ஒரு சில இடங்களில் 2 கிளைகளாக பிரிகிறது.

ஆற்றில் நடுத்திட்டில் செடி கொடிகள் வளர்ந்து காணப்படும். இந்த பவானி ஆற்றை ஒட்டி பிரசித்தி பெற்ற வன பத்ரகாளியம்மன் கோவிலும் உள்ளது.

ஆயுத பூஜை விடுமுறையை யொட்டி நேற்று வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர். இதே போல் மேட்டுப்பாளையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்பட்டது.

வன பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து தேக்கம்பட்டிக்கு செல்லும் வழியில் பம்ப் ஹவுஸ் உள்ளது. இதன் அருகே பவானி ஆறு 2 கிளைகளாக பிரிந்து ஓடுகிறது. ஆற்றின் நடுவே திட்டு உள்ளது.

கோவை கவுண்டர் மில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 51 பேர் நேற்று தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ் பகுதிக்கு சுற்றுலா வந்தனர்.

அப்போது பவானி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளில் சிலர் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். குடும்பத்துடன் வந்தவர்கள் நடுத்திட்டில் சமையல் செய்தும், ஓய்வு எடுத்து கொண்டும் இருந்தனர்.

நேற்று மாலை திடீரென பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பம்ப் ஹவுஸ் பகுதியில் பவானி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கி அலறினார்கள். இதனை பார்த்த கரையில் இருந்தவர்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். பரிசல் ஓட்டிகளும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உதவியுடன் லைப்ஜாக்கெட்டுகள் கொண்டு செல்லப்பட்டு ஆற்றின் நடுத்திட்டில் சிக்கிய குழந்தைகள் உள்பட 51 பேர் பரிசலில் மீட்கப்பட்டனர்.
பவானி ஆற்றில் சிக்கியவர்கள் பரிசல் மூலம் மீட்பு

அப்போது இரவு நேரம் என்பதால் டார்ச் லைட் வெளிச்சத்தில் மீட்பு பணி நடைபெற்றது. சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னரே அவர்களை மீட்க முடிந்தது.

மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ், பவானி ஆற்றங்கரைகளில் சைரன் வைக்கப்பட்டு உள்ளது. பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது இந்த சைரன் ஒலிக்கும்.

உள்ளூரை சேர்ந்தவர்கள் இந்த சைரன் ஒலித்தால் பவானி ஆற்றில் இருந்து கரையேறி விடுவார்கள் நேற்று பவானி ஆற்றின் நடுத்திட்டில் சிக்கிய 51 பேரும் வெளியூரை சேர்ந்தவர்கள் என்பதாலும், சைரன் ஒலித்ததை அவர்கள் கவனிக்கவில்லை என்பதாலும் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர்.

மேட்டுப்பாளையம் பம்ப் ஹவுஸ் பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் அடிக்கடி பவானி ஆற்றில் சிக்கி கொள்வது அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் நுழைவதை தடுக்க பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.