ஆஸ்திரேலியாவில் பிரிந்து சென்ற காதலி, குடும்பத்துடன் சுட்டுக்கொலை

230 0

ஆஸ்திரேலியாவில் பிரிந்து சென்ற காதலி, குடும்பத்துடன் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டின் 5-வது மிகப்பெரிய நகரமான இன்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் ஆன்ட்ரியாஸ் (வயது 25). இவரும் அதே பகுதியை சேர்ந்த நாடின் ஹின்டர்ஹோல்சர் (19) என்ற இளம் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக நாடின் ஹின்டர்ஹோல்சர், ஆன்ட்ரியாசை பிரிந்து சென்றார். அதன் பிறகு நாடின் ஹின்டர்ஹோல்சர், ஐஸ் ஹாக்கி விளையாட்டு வீரரான புளோரியான் ஜானி (24) என்பவரை காதலித்தார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு ஓட்டலில் தனது முன்னாள் காதலி நாடின் ஹின்டர்ஹோல்சர் மற்றும் அவரது புதிய காதலர் புளோரியான் ஜானி ஆகிய இருவரும் ஒன்றாக இருப்பதை ஆன்ட்ரியாஸ் பார்த்தார். தனது காதலி தன்னை பிரிந்து வேறொரு நபருடன் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு அவர் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஆன்ட்ரியாஸ், நாடின் ஹின்டர்ஹோல்சரின் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த நாடின் ஹின்டர்ஹோல்சரின் தந்தை ரூபர்ட் (59) ஆன்ட்ரியாசை எச்சரித்து அனுப்பினார். இதனால் அங்கிருந்து கோபத்துடன் கிளம்பிய அவர், தனது வீட்டுக்கு வந்து துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மீண்டும் நாடின் ஹின்டர்ஹோல்சர் வீட்டுக்கு சென்றார்.

வீட்டுக்குள் நுழைந்த அவர் நாடின் ஹின்டர்ஹோல்சரின் தந்தை ரூபர்ட், தாயார் ஆண்ட்ரியா (51) மற்றும் சகோதரர் கெவின் (25) ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டின் மேல்தளத்தில் ஒரே அறையில் தூங்கி கொண்டிருந்த நாடின் ஹின்டர்ஹோல்சர் மற்றும் புளோரியான் ஜானியை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர்கள் இருவரும் படுக்கையிலேயே பிணமாகினர். இதையடுத்து, ஆன்ட்ரியாஸ் தாமாகவே போலீஸ் நிலையத்துக்கு சென்று, தான் 5 பேரை கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.