மேகேதாட்டு அணையால் மேட்டூருக்கு சொட்டுத் தண்ணீர் வராது; அணை கட்ட அரசு அனுமதிக்கக் கூடாது!- வைகோ

205 0

மேகேதாட்டு அணையால் மேட்டூருக்கு சொட்டுத் தண்ணீர் வராது என்றும் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டி முடிக்க வேண்டும் என்பதில் கர்நாடக மாநிலம் முனைப்பாக இருக்கின்றது. கர்நாடக அரசின் சார்பில் அதன் நிர்வாக நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ள கடிதத்தில், காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழகத்தின் கருத்தையோ, அனுமதியையோ பெற வேண்டிய தேவை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான 1892-ம் ஆண்டில் மைசூரு மாகாணத்திற்கும் – சென்னை மாகாணத்திற்கும் இடையே உருவான ஒப்பந்தம், 1924-ல் போடப்பட்ட ஒப்பந்தம் ஆகிய இரண்டுமே, காவிரியின் குறுக்கே அணை கட்டுவது குறித்து திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்து இருக்கின்றன.

1892 ஒப்பந்தத்தின்படி மைசூரு மாகாணத்தின் முதன்மையான ஆறுகள் என்று ஓர் அட்டவணை உருவாக்கப்பட்டு, அந்த ‘ஏ’ அட்டவணையில் காவிரி, துங்கபத்ரா, ஹகரி அல்லது வேதவதி, பெண்ணாறு அல்லது வடபினாகினி, சித்திராவதி உள்ளிட்ட 15 ஆறுகள் சேர்க்கப்பட்டன.

சென்னை மாகாண அரசின் ஒப்புதல் இல்லாமல் மைசூர் அரசு மேற்கண்ட ‘ஏ’ அட்டவணை ஆறுகளில் அணைகள் கட்டக் கூடாது; இந்த ஆறுகளில் புதிய நீர்த் தேக்கமோ, அணைக்கட்டோ கட்ட விரும்பினால் மைசூர் மாகாண அரசு – சென்னை அரசுக்கு அது குறித்த திட்ட விவரங்களைத் தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும், என்று 1892-ம் ஆண்டு ஒப்பந்தம் திட்டவட்டமாக கூறுகிறது.

அதே போன்று 1924-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தமும் அதையே குறிப்பிடுகிறது. இந்த ஒப்பந்த விதி 10-ல் 15 உட்பிரிவுகளில் இரு மாநிலங்களும் புதிய நீர்த்தேக்கங்களை கட்டிக் கொள்வது, நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்த நடைமுறைகளை வரையறுக்கின்றன. காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பும், 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் உருவான ஒப்பந்தத்தின் விதிகளையே அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தொகுதி – ஏ, பாகம் 9-ல், பிரிவு ஓஐ-ல் கீழ்கண்டவாறு தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. ‘மேல் பாசன மாநிலம், கீழ்ப்பாசன மாநிலங்களுக்கு அட்டவணையில் ஒதுக்கி உள்ள தண்ணீரின் அளவைப் பாதிக்கும் செயலைச் செய்யக் கூடாது. ஆனால் தொடர்புடைய மாநிலங்கள் தங்களுக்குள் கலந்து பேசி – ஒழுங்குமுறைக் குழுவின் ஒப்புதலைப் பெற்று மேல் பாசன மாநிலம் தண்ணீர் திறந்து விடும் முறையில் மாறுதல் செய்து கொள்ளலாம்’.

இதன்படி கர்நாடகம் தன் விருப்பப்படி புதிய அணைகள் கட்டிக் கொள்ள காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பும் அனுமதிக்கவில்லை. காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுகளிலும், கர்நாடகம் தன்னிச்சையாக அணைகள் கட்டிக் கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

கர்நாடகத்தில் காவிரி ஆற்றில் உள்ள பெரிய அணை கிருஷ்ண ராஜசாகர் அணை ஆகும். அதன் கொள்ளளவு 46 டி.எம்.சி. மற்ற அணைகளான ஹேமாவதி, கபினி, ஹேரங்கி உள்ளிட்ட அணைகளின் மொத்த நீர் கொள்ளளவு 114 டி.எம்.சி. ஆகும்.

தற்போது கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பி, கபினி அணை நிரம்பி, அர்க்காவதி அணை நிரம்பி வெள்ள நீர் வெளியேறினால், அந்த நீர் வேகமாக மேட்டூர் அணை வந்து சேரும். இடையில் கர்நாடக எல்லைக்குள் தடுப்பு அணை கிடையாது. அந்த நீரை மேட்டூருக்கு வரவிடாமல் தடுக்க கர்நாடகம் போட்டிருக்கின்ற திட்டம்தான் மேகேதாட்டுவில் 67.14 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட அணை கட்டும் திட்டம் ஆகும்.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட வருவதற்கு வழி இல்லாமல் போகும். இதனால் தமிழகத்தின் உயிர் ஆதாரமான காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்” என வைகோ தெரிவித்துள்ளார்.