இருவேறு வாகன விபத்துக்களில் இருவர் பலி

207 0

வவுனியா – கெப்பிட்டிகொல்லாவ பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்  சனிக்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கெப்பிட்டிகொல்லாவ பொலிசார் தெரிவித்தனர்.

கெப்பிட்டிகொல்லாவ 54  பகுதியை சேர்ந்த வயதுடையகுணதிலக குமாரசிங்க என்னும்  நபரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணிக்கும் போது சிறிய ரக லொறி ஒன்றுடன் மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் கெப்பிட்டிகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த நபரின் சடலம் கெப்பிட்டிகொல்லாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கெப்பிட்டிகொல்லாவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அநுராதபுரம் பிரதேசத்தில் இருந்து நொச்சியாகம நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னாள் வந்த துவிச்சக்கரவண்டி மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாக தலாவ பொலிசார் குறிப்பிட்டனர்.

விபத்தில் பலத்த காயங்களுக்குட்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் போது சிகிச்சை பலனின்றி துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர்  உயிரிழந்துள்ளார்.

விபத்தில் தலாவ பகுதியை சேர்ந்த 57 வயதான ரம்பண்டா என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலம்  தலாவ வைத்திய சாலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலாவ பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.