சர்வதேச நிகழ்வுகளை இலங்கையில் நடத்த முன்வருமாறு வெளிநாடுகளிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் வேண்டுகோள்

317 0

உயிர்த்த  ஞாயிறு  குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர்  பின்னடைவைக்கண்ட  சுற்றுலாத்துறையை குறுகிய  காலத்திற்குள்ளாகவே அரசாங்கம் அதன் துரிதமான  நடவடிக்கைகளின் மூலமாக மீட்டெடுத்து முன்னேற்றப்பாதையில் நடைபோடவைத்திருக்கின்றது என்று தெரிவித்திருக்கும்  சுற்றுலாத்துறை அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ  சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க சுற்றுலாத்துறை மூலமான  வருமானத்தை அதிகரிப்பதற்காக எதிர்காலத்தில்   சர்வதேச நிகழ்வுகளை இலங்கையில் நடத்த முன்வருமாறு   வெளிநாடுகளிடம்  வேண்டுகோள்  விடுத்திருக்கின்றார்.

சர்வதேச சுற்றுலாத்தறை தினத்தை முன்னிட்டு  கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த  நிகழ்வில் பிரதம அதிதியாக  கலந்து கொண்டு  உரையாற்றுகையில்  இவ்வாறு தெரிவித்த அவர் சுற்றுலாத்துறைக்குள் இளம் சமுதாயத்தினருக்கும்  சிறந்த  வாய்ப்புக்கள் காணப்படுவதனால் அவர்களையும்  இத்துறைக்குள் பிரவேசிக்குமாறும்  அழைப்பு  விடுத்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது  ,

சர்வதேச  சுற்றுலா  தினத்தை  முன்னிட்டு  உலகளாவிய  ரீதியில்  பல்வேறு  நிகழ்வுகள்   ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளன. அதன்  அங்கமாக  எமது நாட்டிலும் பல்வேறு நிகழ்வுகள்  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளன. அதன்  ஊடாக  சுற்றுலாத்துறை  தொடர்பில்  அனைவரும்  அறிந்து  கொள்ளக்கூடியதாகவிருக்கும் .  சுற்றுலாத்துறையும்  தொழில் வாய்ப்புகளும் :சகலருக்குமான  சிறந்த   எதிர்காலம்  என்னும்  இந்த  தினத்திற்கான  தொனிப்பொருளுக்கு  ஏற்ப  சுற்றுலாத்துறை தொழில்  வாய்ப்புக்களை  அதிகரிக்கும்  நடவடிக்கைகளை  முன்னெடுக்க வேண்டியது  அவசியமானதாகும்.

உயிர்த்த  ஞாயிறு  தின  குண்டுத்தாக்குதல்களை  அடுத்து  ஹேட்டல்களின்  வருவாயில்  சற்று வீழ்ச்சி  ஏற்பட்டது .  ஆயினும்  அதனை  பாடமாகக்கொண்டு    பாதுகாப்பு படையினரது  கடின  உழைப்பின்  காரணமாக  சில  மாதங்களுக்குள்   நாட்டின் பாதுகாப்பை  உறுதிப்படுத்தக்கூடியதாகவிருந்தது. நாடு பூராகவும்  பாதுகாப்பு ஏற்பாடுகள்  பலப்படுத்தப்பட்டன, பாதிப்பை ஈடு செய்ய சந்தை வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமான முன்னெடுக்கப்பட்டன.

அத்தகைய பாதுகாப்பு  ஏற்பாடுகளின்  விளைவாக  ஆறு  மாதங்களுக்குள் சுற்றுலாத்துறை  உட்பட அனைத்து துறைகளையும்  உறுதிப்படுத்திக்கொள்ளக்கூடியதாகவிருந்தது. இந்த இக்கட்டான  நிலையை எதிர்கொண்டமையின்  விளைவாக  உலக நாடுகளில்   எமது நாடு  எடுத்துக்காட்டாக  திகழ்ந்த , அதேவேளை    சிறந்த   படிப்பினையையும் கொடுத்தது.

எமது நாடு உலக சுற்றுலாத்துறை ஸ்தாபனத்தின்  விதிமுறைகளுக்கு இணங்க  செயற்பட்டு  வரும் நாடு என்ற  பெருமையையும் பெற்றுள்ளது. இந்த சுற்றுலாத்துறை  தினத்தை முன்னிட்டு  பெந்தொட்டையில் அறுகம்பை ஆகிய பிரதேசங்களில் முக்கிய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அறுகம்பையும்  அபிவிருத்தி செய்ய வேண்டிய பகுதியாக உள்ளது. கொழும்பில் மாத்திரமல்லாது அதற்கு வெளி பிரதேசங்களையும்  சுற்றுலாத்துறையில் வளர்ச்சி கண்ட பிரதேசங்களாக்குவதற்கான  நடவடிக்கைகளை  முன்னெடுக்க  வேண்டியது அவசியமானதாகும் .

சுற்றுலாத்துறையில் இளம் சமுதாயத்தவர்களுக்கான  பாரிய  வாய்ப்புக்கள் இருக்கின்றன.ஆகவே ,சுற்றுலாத்துறை தொடர்பான  கற்றலை  மேற்கொள்வதன்  ஊடாக தொழில்  வாய்ப்புக்களை  பெற்றுக்கொள்ளக்கூடியதாகவிருக்கும். பலாலி விமான  நிலையத்தை சர்வதேச  விமான நிலையமாக  மாற்றியமைப்பதன் ஊடாக  உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரயாணிகளை கவரும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். இந்த  விமான  சேவை ஊடாக இந்திய பிரயாணிகள் 45 நிமிடத்தில்  இலங்கைக்கான  விஜயத்தை  மேற்கொள்ளக்கூடியதாகவிருக்கும்.

சர்வதேச  நிகழ்வுகளை இலங்கையில்  நடத்தவும்  எதிர்பார்க்கின்;றோம். அதற்கானவாய்ப்புக்களை வெளிநாடுகள் ஏற்படுத்திக்கொடுக்கும்  என நம்புகின்றோம்.மேலும், சுற்றுலாப்பயணிகள் நாடு  பூராகவும்  பயணிப்பதற்கு  ஏற்ற வகையில் போக்குவரத்து அபிவிருத்தி  திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன. அதன் ஊடாக நாட்டு  சுற்றுலாத்தறையை மேலும் முன்னேற்றகரமான  துறையாக  மாற்ற  கூடியதாகவிருக்கும். எதிர்கால சந்ததியினருக்கு சுற்றுலாத்துறைக்குள்  நுழைவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான முன்னேற்றகரமான நடவடிக்கைகளை  மேற்கொள்வதன் ஊடாக  இவ்வருடத்தில் மாத்திரமல்லாது 2023 ஆம் ஆண்டாகும் போது 5 இலட்சத்திற்கும் அதிகமான  சுற்றுலாப்பயணிக்ளை நாட்டினுள்  கவரக்கூடிய  நிலைக்கு முன்னேறும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது  அவசியமானதாகும்.