தேரர்கள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்துகின்றனர் -ரணில்

229 0

தேரரின் பூதவுடலைக்கொண்டு பௌத்த தேரர்கள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளதாக பிரதமர்ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் பௌத்த மதகுரு கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் நேற்று தகனம் செய்யப்பட்டது.

இந்தவிடயம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில்ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் ஒரு தரப்பினர் பௌத்த தேரர்கள் சிலரை தமது அரசியலுக்கு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றார்கள் என்றும் இந்த அரசியல் நாடகம்தான் முல்லைத்தீவு  நீராவியடியில் அரங்கேற்றப்பட்டுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறந்த விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்குப் பொருத்தமான இடத்தை நீதிமன்றம் வழங்கியிருந்த போதிலும் அதனை மீறி, நீதிமன்றத்தை அவமதித்து தாம் நினைத்த மாதிரி பௌத்த தேரர்கள் சிலர் செயற்பட்டுள்ளார்களென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலிருந்து சென்ற தேரர்கள் தலைமையிலான குழுவினர் சர்ச்சைக்குரிய இடத்தில் இன, மத நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் இடத்தில் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்துள்ளார்கள்.

இந்த அடாவடியில் ஈடுபட்ட தேரர்களை ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் ஒரு தரப்பினர் இயக்குகின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திட்டமிட்ட வகையில் இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இந்த அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் இதனை தாம் வன்மையாகக்கண்டிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.