போலி ஆவண தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு : மூவர் கைது

244 0

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலயாணி பிரதேசத்தில் போலி ஆவண தயாரிப்பு நிலையமொன்று சுற்றி வளைக்கப்பட்டு சந்தேகநபர்கள் மூவர் மீரிகம விஷேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வத்தளை, கனேமுல்ல மற்றும் மருதங்கடவல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 39 , 53 மற்றும் 63 வயதுடையவர்கள் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அரச அதிகாரிகள், காணிப் பதிவாளர் அலுவலகம், சட்டத்தரணி, அதிபர், இலங்கை துறைமுக அதிகார சபை, திருமண பதிவாளர், கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் முத்திரைகளைப் பயன்படுத்தி குறித்த சந்தேகநபர்களால் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான 18 முத்திரைகளும் , இங்கு தயாரிக்கப்பட்ட போலியான ஆவணங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. மீரிகம விஷேட குற்ற விசாரணைப் பிரிவினரால் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.