கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா; அரசாணைக்கு எதிராக வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

172 0

கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் கோயில் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களாக இருந்தாலும் அந்நிலத்தில் அவர்கள் 5 ஆண்டுகளாக வசித்து வந்தால் பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும் அதற்கான அரசாணையையும் தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி பிறப்பித்தது. இதில் கோயில் நிலங்களில் நீண்ட நாளாகக் குடியிருப்பவர்களுக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், “சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையால் தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் அளவுக்கு உள்ள கோயில் நிலங்களில் ஆயிரம் ஏக்கர் வரை பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கும் தனிநபர்களுக்கும் பட்டா வழங்க வகை செய்வதால், கோயிலுக்குச் செல்வதற்கும், கோயில் விழாக்கள் நடத்துவதிலும் கூட தனிநபர்களின் அனுமதி பெற வேண்டிய பிரச்சினை ஏற்படும் சூழல் உருவாகும்.

கோயில் நிலங்களைத் தனியாருக்கு ஒதுக்கக்கூடாது என உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இருக்கும் நிலையில் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும்” எனக் கோரியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை 20-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.