முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அமெரிக்க பயணம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று மாலை துபாய் புறப்பட்டு செல்கிறார். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று தொழில் அதிபர்களை சந்திக்கிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு தொழில் முதலீட்டை ஈர்க்க கடந்த மாதம் 28-ந்தேதி லண்டன் சென்றார்.
அங்குள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை சென்னையில் தொடங்குவதற்கான ஒப்பந்தம் உள்பட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவரது முன்னிலையில் கையெழுத்தானது.
அதன்பிறகு அங்கிருந்து 1-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். அங்கு மிகப்பெரிய மாட்டுப் பண்ணையை பார்வையிட்டார். சேலத்தில் அமைய இருக்கும் கால்நடை பூங்காவை அதே போல் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு நியூயார்க் நகரில் தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். அப்போது 35-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
சான்பிரான்சிஸ்கோ நகரில் தொழில் அதிபர்களை சந்தித்தபோது பல்வேறு தொழில் அதிபர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்தனர்.
இந்த தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது பற்றியும் ஆலோசித்தார்.
ப்ளூம் எனர்ஜி நிறுவனம், திட ஆக்சைடு எரிபொருள் செல்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமியின் அமெரிக்க சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 4.40 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் -ல் இருந்து விமானம் மூலம் துபாய் புறப்படுகிறார். நாளை துபாயில் பல்வேறு இடங்களுக்கு சென்று தொழில் அதிபர்களை சந்திக்கிறார்.
2 நாட்கள் துபாயில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி 9-ந்தேதி நள்ளிரவு 2.45 மணிக்கு புறப்பட்டு 10-ந்தேதி சென்னை வந்தடைகிறார்.