அமைச்சரவை தீர்மானத்தின்படி 7 பேரை விடுதலை செய்யக் கோரிய நளினி மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

260 0

அமைச்சரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட கோரி நளினி தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை கவர்னர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இதையடுத்து தீர்மானத்துக்கு விரைவாக கவர்னரிடம் ஒப்புதலை பெற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் அல்லது அமைச்சரவை தீர்மானத்தின்படி எங்களை (7 பேரையும்) விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று நளினி வழக்கு தொடர்ந்தார்.
கவர்னரிடம் கேள்வி
இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, நளினி தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன், ‘நியமன பதவியில் உள்ள கவர்னரிடம் தீர்மானத்துக்கு ஏன் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை? என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு, ஜனநாயக ரீதியில் கேள்வி கேட்க முடியும். அதற்கு சட்டத்தில் இடம் உள்ளது’ என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் வாதிட்டார். அவர், ‘அரசியலமைப்புச் சட்டம் கவர்னருக்கு என்று தனிப்பட்ட அதிகாரத்தை வழங்கியுள்ளது. அந்த அதிகாரத்தில் மாநில அரசு தலையிட முடியாது.
மேலும் தீர்மானமோ அல்லது கடிதமோ மாநில அரசால் கவர்னருக்கு அனுப்பி வைக்க மட்டுமே முடியும். அதன் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து கவர்னரிடம் கேள்வியோ அல்லது விளக்கமோ அரசால் கேட்க முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வாதிட்டு இருந்தார்.
தலையிட முடியாது
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து இருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்து நேற்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ‘7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மனுதாரர் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு ஒப்புதலுக்காக பரிந்துரை செய்துள்ளது.
தமிழக அரசு தன்னுடைய கடமையை செய்துவிட்டது. இந்த சூழலில் அரசுக்கு எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மனுதாரரின் கோரிக்கையிலும் ஐகோர்ட்டு தலையிட முடியாது’ என்று கூறியுள்ளனர்.