மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைச் செய்த கணவர் நஞ்சருந்தி தற்கொலை

215 0

மெதிரிகிரிய பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைச் செய்த கணவரொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மெதிரிகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியசென்புற பகுதியில் இன்று செவ்வாய்கிழமை காலை 6 மணியளவில் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பெண்ணெர்ருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது தம்பதியினர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக ஏற்பட்ட மேதலில் , கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இந்நிலையில் படுகாயமடைந்த மனைவி மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாருக்கு , சம்பவத்தின் பின்னர் கணவரும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது தியசென்புற பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய மஞ்சுளா குமாரி மற்றும் அவருடைய கணவனான 48 வயதுடைய கருணாரத்ன பண்டா என்பவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மெதிரிகிரிய பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.