அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு அமைவாக தமிழர் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுத்தருவதாக வடக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதை நம்பி, தமிழ் மக்கள் மீண்டுமொரு முறை ஏமாறமாட்டார்கள்.
இலங்கையர் என்ற அடிப்படையில் சம உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏதுவான மாற்றமொன்றையே அவர்கள் விரும்புவார்கள். அதற்கு ஏற்புடைய தலைமைத்துவத்திற்கே தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டதன் பின்னர் களனி விகாரையில் ஆரம்பித்து, நேற்று (நேற்று முன்தினம்) கொழும்பில் மதத்தலைவர்களுடனான சந்திப்பு வரை நீண்ட பயணத்தை நாங்கள் மேற்கொண்டிருந்தோம். இப்பயணத்தின் போது பல்வேறு பிரதேசங்களிலும் விவசாயிகள், சிறிய நடுத்தர கைதொழில் முயற்சியாளர்கள் பலரைச் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்தோம்.
அதன்போது அவர்களில் பலரும் தாம் எதிர்கொண்டிருக்கும் பாரிய கடன்சுமை தொடர்பில் பகிர்ந்துகொண்டார்கள். மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பின்னர் ஏற்பட்ட பாரிய நட்டத்தின் காரணமாக வங்கிகளில் கடன்களுக்கான வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டது. அவ்வாறு அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் கடன் பெற்றவர்களும் அதிகளவு வட்டியைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனை மீளச்செலுத்த முடியாமல் பலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் உள்ளன. வீட்டுக்கடன், விவசாயக்கடன், சுயதொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்பெறுநர்களும் வங்குரோத்து நிலையை அடைந்தனர்.
இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் ஆட்சியமைக்கக்கூடிய எந்தவொரு அரசாங்கமும் இந்தக் கடன் வழங்கலைப் பொறுத்தவரையில் ‘கடன் மறுசீரமைப்புக் கொள்கை’ ஒன்றினை ஏற்படுத்த வேண்டும். என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் ஊடாக புதிய தொழிலை ஆரம்பிப்பதற்குக் கடன் வழங்குவதை விடவும், ஏற்கனவே ஆரம்பித்த தொழிலைக் கைவிடாமல் இருப்பதற்கே கடன் வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. எனவே எமது எதிர்கால அரசாங்கத்தில் இவ்விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி, கடன் மறுசீரமைப்பு முறைமையை ஒன்றை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்போம் என்றார்.
அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பின்வருமாறு பதிலளித்தார்.
கேள்வி : மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதே?
பதில் : அடாவடித்தனங்களைக் கைவிட்டு தற்போதேனும் ஜனநாயக ரீதியில் தேர்தலில் போட்டியிடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி முன்வந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். கடந்த காலத்தில் பீட்ல் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட போது, அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்தது. அதேபோன்று கடந்த 2015 இல் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கும் திரைமறைவில் நின்று மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டது.
கடந்த 30 வருடகாலத்திற்கு முன்புவரை தேர்தல்களில் போட்டியிடுவோரை வன்முறைகளால் எதிர்த்தல், தேர்தலில் வாக்களிப்போரைத் தாக்குதல் போன்றவையே மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகளாகக் காணப்பட்டன. எனினும் தற்போதேனும் அவற்றை விடுத்து, மக்களிடம் சென்று வாக்குகளைக் கோருவோம் என்று சிந்தித்து, ஜனநாயக முறையில் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர்கள் முன்வந்திருக்கின்றமை குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஆனால் எந்தவொரு தரப்பினரும் எமக்கு சவாலாக முடியாது என்பதே உண்மை. இது ஒரு தீர்மானம் மிக்க தருணமாகும். நாட்டைப் பொறுத்தவரை மிக முக்கியமானதொரு நிலையில், மக்கள் யாரை தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்ற தீர்மானத்தைச் சரியாகச் சந்தித்து மேற்கொள்ள வேண்டும்.
கேள்வி : 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரங்களை வழங்கி தமிழ் மக்கள் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக பிரதமர் கூறியிருக்கிறார். வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை உங்களது வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நிலைப்பாடு எத்தகையதாக இருக்கிறது?
பதில் : கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதே தினத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார். அனுபவ ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்த அறிந்திருப்பதாகக் கூறிய அவர், அப்பிரச்சினைகளுக்கு ஒரே நாட்டிற்குள் ஒரே சட்டத்தின் கீழ் சம உரிமைகளை அனைவரும் அனுபவிக்கத்தக்க வகையில் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியது. அதேபோன்று அவர்களும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கினார்கள். தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதாகவும், புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதாகவும் கூறினார்கள். ஆனால் கடந்த 4 வருடகாலத்தில் அவையெவையம் நடைபெறவில்லை. இந்நிலையில் மீண்டும் தமிழ்மக்கள் ஏமாறுவார்கள் என்று நாங்கள் கருதவில்லை. இலங்கையர் என்ற அடிப்படையில் சம உரிமைகளை அனுபவிக்கத்தக்க மாற்றமொன்றினையே அவர்கள் விரும்புவார்கள். அதற்கு ஏற்றவாறான தலைமைத்துவத்திற்கே அவர்கள் வாக்களிப்பார்கள்.
கேள்வி: கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் கூட, அவருடைய அமெரிக்கப் பிரஜாவுரிமை இன்னமும் நீக்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே?
பதில் : கோத்தபாய ராஜபக்ஷவின் மீது காணப்படும் அச்சத்தின் காரணமாகவே இத்தகைய பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வெளிநாட்டுப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் ஜனாதிபதியாக முடியாது என்று கோத்தபாய ராஜபக்ஷவை இலக்காகக் கொண்டு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்ட போதே அவர் மீதான அச்சம் வெளிப்பட்டுவிட்டது.
அதே அடிப்படையிலேயே தற்போது அமெரிக்கப் பிரஜாவுரிமை இன்னமும் நீக்கப்படவில்லை என்று பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் நாட்டு மக்களின் தலைவராகவுள்ள ஒருவர், தற்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒருவர் பிரஜாவுரிமையை நீக்கிவிட்டதாக மக்களிடம் பொய் கூறுவாரா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவையனைத்தும் வேறெந்த வேட்பாளர் மீதும் இல்லாத பயம் கோத்தபாய ராஜபக்ஷ மீது இருப்பதையே வெளிப்படுத்துகின்றது.