பல்கலைக்கழகத்தை நம்பிக்கையாளர் நிதியத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

243 0

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை நம்பிக்கையாளர் நிதியத்தின் கீழ் கொண்டுவந்து நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஹிஸ்புல்லாவின்  ‘பட்டிகம்பஸ்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் 2012 பதிவுசெய்யப்படும்போது திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இஸ்லாமிய சட்டத்தை கற்பிக்கும் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அத்துடன் இந்த நிறுவனத்தை சவூதி நாட்டு தனவந்தர்களின் உதவியுடன் நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்ததாக அதன் ஸ்தாபகராக இருக்கும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆரம்பம் காலம் முதல் தெரிவித்து வருகின்றார்.

அதனால் சவூதி நாட்டு தனவந்தர்கள் சிலர் இந்த நாட்டில் இருக்கும் வரிய மக்கள் கல்வியை பெற்றுக்கொள்ளும் நோக்கிலே இதற்காக உதவி செய்திருக்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது இந்த நிறுவனத்துக்காக அனுப்பப்பட்ட பணத்தை ஹிஸ்புல்லாவின் குடும்ப கணக்குக்கு திருப்பிக்கொண்டதுதான் எமக்கு இருக்கும் பிரச்சினை.

மாறாக இந்த நிறுவனம் ஷரீஆ சட்டம் கற்பிக்கும் நிறுவனமாக எங்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.