இந்நாட்டை மிகச் சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு, இளந்தலைமுறையினரில் ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டுமென்ற எண்ணம் அனைவரது மனதிலும் உள்ளதென, அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மேலும் இங்கு குறிப்பிடும்போது,
ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் ஜனநாயம் நிறைந்த கட்சியென்றே நான் நினைக்கின்றேன்.
ஆனால், குறித்த கட்சிகளுக்குள் பல பிரிவுகள் தற்போது காணப்படுகின்றது. அதில் ஒரு பிரிவினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.
அதேபோன்று மற்றும் சிலர், அமைச்சர் சஜித் பிரேமதாஸவையே, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்று கருதுகின்றனர்.
ஆனால், உண்மையாகவே இவ்விடயத்தில் நாம் முதலில் கலந்துரையாடலில் ஈடுபட்டு, அதனூடாகவே ஜனாதிபதி யார் என்ற இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளோம்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு வெற்றியடைவது என்பது குறித்த கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளோம்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஏனைய பல கட்சிகளுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றமையானது, அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிரான நடவடிக்கை அல்ல என்றார்.