தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்டமைக்கு இந்து குருமார் பேரவை கண்டனம்!

200 0

கன்னியா போராட்டத்தின்போது தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்ட சம்பவத்தினை தாம் வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

குறித்த பேரவை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

“கன்னியா போராட்டத்தின்போது ஆதீன சுவாமிகள் மீது பேரினவாதத்தைச் சேர்ந்தவர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டமை கடும் கண்டனத்திற்குரியது.

இந்து சமயத்திலே உயர் நிலையில் இருக்கும் எமது சுவாமி மீது நடத்தப்பட்ட இச்சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு, எமது மதத்தின் தலைவர்களுக்குரிய கௌரவத்தினயும் உரிய முறையில் வழங்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

குறித்த அநாகரிக செயலை மேற்கொண்டவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லையென நாம் அறிகின்றோம்.

கன்னியா போராட்டத்தை அகிம்சை முறையில் மேற்கொண்ட மக்களை அடக்க முற்பட்டு வருகின்றனர்.

எமது சமய தலைவர்களில் ஒருவரும் தமிழர்களின் பூர்வீக கன்னியாவை மீட்கும் போராட்டத்தின் முதன்மை வழிகாட்டியுமான தென் கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளாருக்கு இழைக்கப்பட்ட கொடுஞ்செயலுக்கு நீதி வேண்டும்” என மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை தமது கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.