ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்- டிரம்ப் தகவல்

309 0

ஈரான் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வியாழக்கிழமையன்று ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே, அதாவது 1000 யார்டுகள் வரை நெருங்கி அச்சுறுத்தும் வகையில் ஈரானின் ஆளில்லா விமானம் பறந்து வந்தது. உடனடியாக அந்த விமானத்தை அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அமெரிக்காவின் எச்சரிக்கையை புறக்கணித்து ஈரான் விமானம் வந்ததால் அமெரிக்க தரப்பு தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
வீரர்களையும், நாட்டு நலன்களையும் தற்காத்துக்கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு இருக்கிறது. அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் சர்வதேச வர்த்தகத்துக்கு இடையூறாக செயல்படும் ஈரானுக்கு அனைத்து நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தங்கள் நாட்டின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் செய்தி குறித்து தங்களிடம் எந்த தகவலும் இல்லை என்று ஈரான் கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.