நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிரான விஜய் மல்லையாவின் மனு மீது அடுத்த ஆண்டு விசாரணை

361 0

இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது அடுத்த ஆண்டு விசாரணை நடைபெறும் என்று இங்கிலாந்து ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். அவருக்கு எதிராக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் வழக்குப் பதிவு செய்துள்ளன.

இந்தியா அளித்த புகாரின்பேரில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், அவரை லண்டனில் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்தனர். அவர் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிபதி எம்மா அர்புத்நாட், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு அளித்தார்.

விஜய் மல்லையா

இந்த உத்தரவுக்கு இங்கிலாந்து உள்துறை மந்திரி சஜித் ஜாவீது ஒப்புதல் அளித்தார். உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி, லண்டன் ராயல் கோர்ட்டில் விஜய் மல்லையா மனு தாக்கல் செய்தார். மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்து, கடந்த 2-ந் தேதி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து ஐகோர்ட்டில் விஜய் மல்லையா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தான் ஆளும் தரப்பினரால் அரசியல்ரீதியாக பழிவாங்கப்படுவதாகவும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய பணத்தை அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு எப்போது விசாரணைக்கு வரும் என்பதை இங்கிலாந்து ஐகோர்ட்டு நேற்று அறிவித்தது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி இங்கிலாந்து ஐகோர்ட்டில் மனு விசாரணைக்கு வருகிறது. 3 நாட்கள் விசாரணை நடைபெறும் என்று ஐகோர்ட்டு அதிகாரி ஒருவர் கூறினார்.